Friday, December 29, 2006

எனக்கு விதிக்கபட்டது

எனக்கு விதிக்கபட்டது

ஒரே ஒரு வாழ்கைதான் - இருந்தும்

உன்னோடு பகிர்ந்து கொள்ளவே

ஆசைப்படுகிறேன்.

Monday, December 25, 2006

Wednesday, December 20, 2006

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து-தவறு
சிறிசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா-அது
திரும்பவும் வராமே பார்த்துக்கோ


--பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

Thursday, December 14, 2006

Master slaves

காலை மெய்லில் வந்திருந்தது அந்த செய்தி நான் வேலை செய்யும் mnc நிறுவனத்தின் தலைமை அதிகாரி மாற்றம். புதிய தலைமை அதிகாரியாக ஒரு இந்தியர். முன்பெல்லாம் மிகுந்த சந்தோஷத்தையும், பெருமைமையும் அளித்த இதுமாதிரியான செய்திகள் இப்பொது பழகியிருக்கின்றன. முன்பு, அதற்கு முன்பு வேலை செய்த நிறுவனங்களிலும் புதிய தலைவர்கலாக் இந்தியர்களே.

"ஈசாப்"பை அடிமையாக வாங்கும் போது "உனக்கு எந்த வேலை நன்றாக வரும்?" என்று கேட்டதற்கு, இங்கு யாருக்காவது எஜமான் தேவையா?? எனக்கு அது நன்றாக வரும்.

Friday, December 08, 2006

வயல்களுக்கு நடுவே கமலஹாசனும், ஹேமமாலினியும்

சென்னை நகரத்தின் தபால் அலுவலகங்களுக்கு ஆறு இலக்க எண்கள் தருவதற்கு முன்பு சென்னை 18 என்றால், அது தேனாம்பேட்டையா, ஆழ்வார்பேட்டையா என்று உடனே விசாரிப்பார்கள். ஆழ்வார்பேட்டை என்றால் புது ஆழ்வார்பேட்டையா அல்லது கிராமமா என்று கேட்பார்கள். தேனாம்பேட்டை என்றால் வெள்ளாளத் தேனாம்பேட்டையா, வன்னியத் தேனாம்பேட்டையா என்று உறுதி செய்து கொள்வார்கள். இன்றும் 600 018 என்றால் இவ்வளவு விசாரிப்புகளைத் தவிர்க்க முடியாது.
சென்னையிலேயே ஓரிடத்திற்கு நான்கு சாலைகளை எல்லைகளாகக் கூற முடியுமானால், அது இந்த ஆழ்வார்பேட்டை-தேனாம்பேட்டைதான். வடக்கே கதீட்ரல் சாலை. தெற்கே சேமியர்ஸ் சாலை. மேற்கே மௌபரீஸ் சாலை. கிழக்கே அண்ணாசாலை. இந்த நான்கு சாலைகள் நடுவில் இந்த பகுதியில் உள்ள சிறு சிறு குடியிருப்புகளையும், சந்து பொந்துகளையும் பட்டியல் எடுக்க நீண்ட நேரமும் பொறுமையும் வேண்டும். சைதாப்பேட்டை போல இங்கும் பல ஜாதிகள் பெயரில் தெருக்கள் உண்டு. இன்று மாற்றுப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தால் கூட ஜாதிப் பெயர்கள் சொல்லித்தான் அடையாளம் காண வேண்டியிருக்கிறது.
இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் நெல் பயிரிடப்பட்டது என்றால் நம்பும்படியாக இருக்கிறதா ? இன்று கஸ்தூரி எஸ்டேட் என்றும், சோழா ஷெரட்டன், ரஷ்யக் கலாச்சார மையம் என்றிருக்கும் இடங்களில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூடப் பச்சை பசேலென்ற வயல்கள் இருந்தன. இன்று சென்னையின் மிகவும் செல்வாக்கும் செல்வமும் கொண்ட பிரமுகர்கள் அங்கு வாழ்கிறார்கள். ஹிந்தித் திரையுலகில் பதினைந்து ஆண்டுகள் நம்பர் ஒன் கதாநாயகியாக விளங்கிய ஹேமாமாலினி முதலில் தன் இல்லத்தையும் பின்னர் நடனப் பள்ளியையும் இங்குதான் அமைத்திருந்தார்.
பச்சைக் குழந்தை வேடத்திலிருந்து படு கிழவன் வேடம் வரை அணிந்து சிறப்பிக்கும் கமல்ஹாசன் இந்த முன்னாள் வயலில்தான் வீடு வாங்கிக் கொண்டு, புதுமணம் புரிந்துகொண்டு புதுக்குடித்தனம் துவங்கினார்.

அசோகமித்ரன்

அசோகமித்ரனின் சென்னை சுவடுகளில் இருந்து..

Wednesday, December 06, 2006

நான் காந்தியா இருக்கறதும், நேதாஜியாக மாறுறதும்


கடைசி காலத்துல மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணிட்டு போறத விட்டுட்டு ஏன் இப்படி ஆணவம் அராஜகம் பண்றீங்க? நான் காந்தியா இருக்கறதும், நேதாஜியாக மாறுறதும் உங்க கைல தான் இருக்குது

விஜயகாந்த்.

Sunday, October 22, 2006

Bye Bye Schumi

He didn’t win the title or even the race. Indeed he didn’t even make the podium. However, Michael Schumacher’s farewell drive in Sunday’s Brazilian Grand Prix illustrated the grit, skill and determination that has made him the greatest driver Formula One racing has ever seen.

Schumacher’s competitive Formula One career may be over, but true to form, the great man entertained us to the last. Thank you Michael.

Monday, October 02, 2006

கரி பூசிக்கொள்

கருமையை முகம் முழுக்க பூசிக்கொள்
வெண்மையாய் ஒரு புன்னகையும் யிட்டு
முகம் முழுக்க கரி பூசிக்கொள்
யாருக்கும் அது தெரிந்துவிடாமல் இருக்கட்டும்

யாரும் இருந்திருக்கவில்லை
உன் முகத்தோல் அழுகியபோது
பாம்பு போல் நெலிந்து ஓடும்
விகாரம் மறைய பூசிக்கொள் அவை இப்பொது
அங்கு இல்லாமல் போகட்டும்

முக கண்ணாடியில் ஒருமுறை பார்த்துகொள்
அழகு பார்த்துகொள்ள அல்ல
பூசிக்கொண்டதை சரி பார்த்துகொள்ள

உனக்கு தெரிந்த அறிந்த முகத்தை
மற்றவருக்கு காட்டிவிடாமலிருக்க நீ பூசிக்கொண்டது
அழகு படுத்த அல்ல மாற்றாக
உன்னை மறைத்துக்கொள்ள.

Friday, August 25, 2006

ஸ்ஸ்சப்பா... கண்ணக்கட்டுதே!

ஒரு நாள் பாராளுமன்றம் நடத்த ஆகும் செலவு ஏழுபத்தி இரண்டு லட்சம்.ஆக ஒரு நிமிடத்துக்கான செலவு இருபத்தாயரம்.(1951ல ஒரு நிமிடத்துக்கான செலவு வெறும் 100 மட்டும். இதுக்கே அசந்தா எப்படி.இவ்வளவு மணி(money)யான நிமிடங்களை நம்ம மேண்மை தாங்கி mp க்கள் எப்படி வீனடிச்சி இருக்காங்க பாருங்க.

11ஆம் லோக் சபா 1996 to 1998: 5.28% of the time was wasted.
12ஆம் லோக் சபா 1998 to 1999: 10.66% of the time was wasted.
13ஆம் லோக் சபா 1999 to 2004: 22.40% of the time was wasted.
14ஆம் லோக் சபா 2004 to 2006: 38.0%
(More than 1/3 rd) was wasted in the first two session itself.
According to a report prepared by the National Social Watch Coalition, titled Citizens Report on Development and Governance - 2006″, current Parliamentary expenditures.

Friday, July 28, 2006

மரணம் விகிதங்களில்

இன்று உள்ள வளர்ந்த மருத்துவ உலகத்தில் எது மனிதனின் இறப்பு, மனிதனின் முடிவு என்பது வருடாவருடம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கின்றன். மேலும் வளர்ச்சி மேலும் தகவல்கள் மேலும் தீர்வுகள் என தினமும் மனிதர்களின் நின்ற இதயம் மற்றும் மற்ற உடல் உறுப்பின் செயலிழக்கங்களில் இருந்து மீட்டு மீண்டும் உயிர்ப்பிக்கபடுகிறார்கள்.

இறப்பு என்பது உடலியல் செயலிழக்கம். ஒரு கோலின் இறப்பை போல ஒரு நட்சசத்திரத்தின்(star) இறப்பை போல இறப்பு என்பது பொருளியல் பிரச்சனை ( engineering problem ). இறப்பின் பிறகு ஆவியோ ஆன்மாவோ இறுபபதற்கான சாத்திய கூறுகள் இல்லை அதாவது ஆவியோ ஆன்மாவோ இயற்பியலின் விதிகளுக்கு உட்பட்டதில்லை ஆனால் மாலிக்கூல்ஸ்(Molecules) இயற்பியலின்
விதிகளுக்கு உட்பட்டது.

ஒரு சிஸ்டம் எப்போது இறப்பு நிலை அடைகிறது அதன் ஒவ்வொரு பாகமும் இறக்கும்போது பாகம் எப்போது இறப்பு நிலை அடைகிறது அதன் ஒவ்வொரு செல்(cell)லும் இறக்கும்போது. நமது உடலில் டிரில்லின் செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு செல்லும் பல ஆயிரம் மாலிக்கூல்களால் ஆனது. இந்த மாலிக்கூல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உருவகிக்கும் புரதங்கள். இந்த புரதங்கள் உருவகிக்கும் ரகசியம் டி.என்.ஏ நூல் ஏணியில் எழுதியுள்ளது.

மாலிக்கூலர் இன்ஜினியரிங் தரும் அறிவியலில் வரும் எதிர்காலத்தில் நம் உடல்கள் செயலிழக்கும் தங்கள் உறுப்புகளை தாங்களே சரி செய்து கொள்ளும் நுட்பத்தை தரலாம். இயற்பியலின் எந்த கோட்டுப்பாடுகளையும் உடைக்காமல் மாலிக்கூலர் இன்ஜினியரிங் நம் உடல்களுக்கு சாகா வரம் தரும்.18ம் நூற்றாண்டின் தத்துவ ஞானி ட்னிஸ் டிடெரொட் சிலைகளை
உயிர்பிக்கும் வழிக்கண்டார் ஆச்சரியமாக இருக்கிறதா ஆமாம் சிலைகளை இடித்து பொடிப்பொடி துகுள்களாக உரமாக மாற்றினார். அந்த உரத்தை கொண்டு தானியங்களையும் கீரைகளையும் விளைவித்து உணவாக்கி உயிர் வளர்த்தார். இதே எளிமையான வழியத்தான் மாலிக்கூலர் இன்ஜினியரிங் சொல்கிறது சிலையை மாலிக்கூல்களாக பிரித்தெடுத்து மனித மாலிக்கூல்களாக உருவகித்தால் உயிர் அற்றது உயிர் பெறுகிறது.

unstack the statue molecules and restack them as man molecules.along the way you brink the dead to life.

மாலிக்கூலர் இன்ஜினியரிங் தரும் இந்த அறிவியல் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் வகையில் மலிவாக ஆகுவதற்கு முன் நாம் இறந்து போகலாம். ஆனால் வரும் காலங்களில் மனிதன் நோயவாய்பட்டோ அழிகியோ இறக்க போவதில்லை. விபத்துகளாலோ அல்லது விரும்பியோ தான் இறந்து போகலாம். இந்த மாதிரி (தற்)கொலைகளை சட்டம் அனுமதிக்க புதிய சட்டம் இயற்றப்படும்.

Thursday, July 27, 2006

Saturday, July 22, 2006

உள்ளாட்சி தேர்தலும் ஒரு உள்குத்து(?) சட்டமும்.

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்( அதுக்கு தானே அவரே :-)).

மேயர் மற்றும் துணை மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் விதத்தில் இச்சட்டம் வழிவகைச் செய்கிறது.இதுவரை மேயர் மற்றும் துணைமேயர்களை மக்களே தேர்ந்தெடுத்து வந்தனர். இந்த அவசர சட்டதின் முலம் அந்த முறை மாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் கணிசமான அளவிற்கு இடங்களை கைப்பற்றியதும், நடைபெற்ற பாண்டிச்சேரி உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் காரைக்கால் நகராட்சியை கைப்பற்றியதுமா??

இந்த அவசர சட்டத்தை பாட்டாளிகட்சி தலைவர் ராமராஸ் வரவேற்று ஒரு யோசனையும் தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் சார்பில் தேந்தெடுக்கப்படும் மன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்து விடும் அபாயம் இருக்கிறது. அதைத் தடுக்க அப்படி வாக்களிக்கும் மன்ற உறுப்பினரின் பதவியைப் பறிக்க வகை செய்ய வேண்டும் என்று அரசுக்கு தெரிவித்துள்ளார். அவருக்கு அவர் பயம்.

எது எப்படியோ,கட்சி சார்பில்லாமல் அந்தந்த இடங்களில் இருக்கும் செல்வாக்கு மிக்கவர்கள் சேவை செய்ய நினைப்பவர்கள் நேரிடையாக தலைவராக இனி வருவது இயலாத காரியம். எங்கும் நீக்கமர கட்சிகளின் ஆதிக்கம் வளர்வதற்கு இச்சட்டம் ஏதுவாக இருக்கும்.

Tuesday, July 18, 2006

மாறும் காட்சிகள்!

முந்தைய அ.தி.மு.க அரசு கொண்டு வந்த கேபிள் டி.வி., எம்.எஸ்.ஓ நிறுவனங்களைக் கையகப்படுத்தும் மசோதாவை, மாநில அரசின் அதிகார வரம்புக்குள்படாத சட்ட முன்வடிவு என்று காரணம் காட்டி தற்போதைய தி.மு.க அரசு விலக்கி கொண்டது. கேபிள் டிவி சட்டம் மட்டுமல்ல புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தை அண்ணா பல்கலைக்கழகத்திடமே தற்போதைய அரசு ஒப்படைத்திலிருந்து, விவசாயிகளின் நலன் கருதி உருவாக்கப்பட்ட 'உழவர் பாதுகாப்பு திட்டம்' வரை பல்வேறு திட்டங்களை ரத்து செய்துள்ளது.

ஒரு அரசு கொண்டு வந்த சட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் அடுத்து வரும் அரசு அப்படியே தொடர்ந்து செயல்படுத்தாமல், ஒன்று அத்திட்டத்தை அப்படியே கிடப்பில் போடுவது அல்லது அத்திட்டத்தை முடக்குவது என்கிற வழக்கத்தை சமீப ஆண்டுகாலமாக ஆட்சியாளர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

கடந்த 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க அரசு முந்தைய தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட சமத்துவபுரம், உழவர் சந்தை போன்ற திட்டங்களை அப்படியே கிடப்பில் போட்டது. அதுமட்டுமல்லாமல் தி.மு.க அரசால் நியமிக்கப்பட்ட சாலை பணியாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது.பின்பு அவர்கள் நீதிமன்றம் சென்று தங்களுக்கான நீதியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் தி.மு.கவின் தலைமைக்கு நெருக்கம் என்று கருதப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகிகளும் பந்தாடப்பட்டு, தங்களுக்கு ஆதரவானவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டது.

இப்போது பந்து தி.மு.கவின் கையில். மறுபடியும் சட்டங்கள், திட்டங்கள் மாற்றப்படுகின்றன அல்லது வாபஸ் பெறப்படுகின்றன. அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர். இதுவரை கிடப்பில் முடங்கி கிடந்த சமத்துவபுரம், உழவர் சந்தை போன்றவைகளுக்கு மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் கழகங்கள் இரண்டுமே ஒருவரை ஒருவர் குறைக்கூறுவதிலும், ஒருவர் மீது ஒருவர் பழிவாங்கும் போக்கை கடைப்பிடிப்பதிலுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மோனோ ரயில் திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், கேபிள் டிவி மசோதா என்று வரிசையாக தி.மு.க அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு அ.தி.மு.க பொதுசெயலர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல் ஒரு கோடியே 99 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் குறுவிவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உழவர் பாதுகாப்புத் திட்டத்தை கைவிடும் தன் முடிவை தி.மு.க அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசுகள் மாறும் போது முந்தைய அரசின் திட்டங்களை கிடப்பில் போடுவதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தர மக்கள்தான் என்றால் அது மிகையல்ல.

சட்டப்பேரவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் உருவாக்கப்பட்ட சட்டங்களை புதியதாக வரும் அரசு விலக்கி கொள்ளும்பட்சத்தில் அச்சட்டங்களை இயற்றுவதில் என்ன பயன் இருக்கப்போகிறது. அது எந்தவகையில் மக்களை சென்றைடயும். இப்படி மாறி மாறி வரும் அரசுகள் முந்தைய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களையும் முடக்கி வைத்தால் மக்கள் நல பணிகள் எந்தவகையில் ஏற்றம் பெறும்.

ஒரு அரசு கொண்டு வரும் நலத்திட்டங்களிலோ அல்லது சட்டங்களிலோ குறைகள் இருந்தால் அவற்றில் சில மாற்றங்களையோ அல்லது அந்த குறைகளை களைந்தோ அத்திட்டங்களை செயல்படுத்த முனைய வேண்டுமே தவிர, அத்திட்டம் கைவிடப்படுவது சரியான தீர்வு அல்ல.

தமிழகத்தில் தொடர்கதையாகி போன இத்தகைய வழக்கங்களினால் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மேல் ஒரு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடுவதற்கு ஏதுவாக இருக்கும். இது ஆரோக்கியமானதும் அல்ல.

ஆட்சி அதிகாரங்கள் மாறலாம். ஆனால் சட்டங்களும், நலதிட்டங்களும் தொடர்ந்து எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தொடர வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு.

Monday, July 17, 2006

#52. கேப்டனை மிஞ்சுவாரா சூப்பர் ஸ்டார்?

ரஜினிகாந்த தொண்டர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் என்ற பெயரில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகின்றனர் தென் மாவட்ட ரஜினி ரசிகர்கள், அதில் விரைவில் ரிலிஸாகும் சிவாஜி படத்தை வெற்றி பெறச்செயத கையோடு, நதிநீர் இணைப்புக்கு சூப்பர் ஸ்டார் முழு வீச்சுடன் பாடுபடவேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கின்றனர். அத்துடன் ரஜினியின் இயக்கத்தில் அரசியல், ஜாதி, மதம் போன்ற குறிக்கீடுகளும் என்றும்மே இருக்கக் கூடாது என்று விருப்பம் தெரிவித்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

நதிநீர் இணைப்பு என்ற விஷயத்திலாவது நம்ம சூப்பர் ஸ்டார் கேப்டனை மிஞ்ச வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் எதிர்பார்ப்பதுதான் இதற்குப் பின்னணியாம்.

பி.கு : இது தவறுதலாக ஒன்றும் நகைச்சுவை தொகுப்பில் தொகுக்கப்படவில்லை

Saturday, July 15, 2006

#51, சிலையும் சிந்தனையும்

மாவீரன் அலெக்சாந்தரைப் பார்க்க ஒரு விருந்தினர் வந்திருந்தார். அவரை அவன் நன்கு உபசரித்தான். தனது மாளிகையிலேயே தங்க வைத்தான். பிறகு அவரைத் தனது அரண்மனைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.

இருவரும் தோட்டத்தைச் சுற்றி வந்தார்கள். தோட்டத்தில் அநேக பெரிய வீரர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. விருந்தினர் ஒவ்வொரு சிலையிடமும் நிற்பார். அலெக்சாந்தர் அவருக்கு அந்த சிலையின் வரலாற்றைச் சொல்லுவான். இவ்வாறு ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக் கொண்டே தோட்டத்தின் கடைசிக்கு வந்து விட்டார்கள்.

வந்த விருந்தினர் அலெக்சாந்தரைப் பார்த்தார். ''இத்தனை வீரர்களின் சிலைகள் இந்தத் தோட்டத்தில் இருக்கும் போது உங்களுடைய சிலை மட்டும் இங்கு ஏன் இல்லை ?'' என்று கேட்டார்.

''இங்கு என்னுடைய சிலையைப் பார்த்து, இது யாருடைய சிலை என்று வருபவர்கள் கேட்பதை விட, மாவீரன் அலெக்சாந்தருடைய சிலை ஏன் இங்கு வைக்கப் படவில்லை என்று கேட்பதையே நான் விரும்புகிறேன் '' என்று பதில் சொன்னான் கிரேக்க மன்னன்.

வினோபாவின் 'குட்டிக் கதைகள்'

Wednesday, July 12, 2006

தேன்கூடு கதை - ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் வேகமாய் போய்கொண்டிருந்தது, குற்ற உணர்வு மேலிட தலைக்குனித்திருந்தேன்.எனக்கே என் செயல் அருவெறுப்பாய் இருந்தது. நான் அழுவதாக நினைத்து டாக்டர் சொன்ன ஆறுதல் மேலும் அவமான உணர்ச்சியால் குத்தியது
எனக்கு வேறு வழி தெரியவில்லை அந்த இடத்தைவிட்டு அவசரமாய் வெளியே வருவதற்கு, குற்றுயிராக இவரை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது திடிர் சொந்தமாகி வண்டியில்
ஏறிக்கொண்டது அப்பொது சமயோசிதமாக தோன்றினாலும் இந்த அரைமணி நேர பயணத்தில் முற்றிலும் குற்ற உணர்ச்சியே மேலோங்கியிருந்தது.

ஆரம்பத்திலிருந்த அவரிடமிருந்த முனுகல் இப்பொது சுத்தமா இல்லை. முனுகும் போது எங்கே நினைவுவந்து என்னை காட்டிகொடுத்து விடுவாரோ என்று பயந்தது மேலும்
வெட்கமாயிருந்தது.இந்த மாதிரியான உளைச்சலுக்கு பேசாமல் அந்த இடத்திலே இருந்திருக்கலாம் போல மற்றும் ஒரு முறை இப்படி நேர்ந்தால் இப்படி செய்ய கூடாது. ச்சய் என்ன கேவலமாய் இப்படி ஒரு சிந்தனை, மற்றும் ஒரு முறையா? ஐய்யோ!.

திடிரன அவரிடமிருந்து அசைவுகள், காற்றை வேகமாக சுவாசிக்க முயற்சித்தார் வேக வேகமாக பேச முயற்சித்தார் எனக்கு திகிலாக இருந்தது அவரின் அசைவுகள் உதரல்களாக வேகமெடுத்தது டாக்டர் கண்களை சோதனை செயதபோது அவரின் கண்கள் வெளிரிருந்தது
தெளிவாக தெரிந்தது டாக்டர் அவருக்கு ஊசிப்போட்டு அமைதிபடுத்தினார் அருகில் வந்து அமர்ந்த டாக்டர் நம்பிகை இழந்திருந்தார் "ஹாஸ்பிடல் போகறவரைக்கும் தாங்கறது கஷ்டம்
தான்".

எனக்கு பெரும் திகிலாக இருந்தது, கடவுளிடம் அவரை உயிர் வாழவை என்ற வேண்டுவதற்கு கூட குழப்பமாயிருந்தது. அவர் இறந்துவிட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது ச்ச ச்ச அவர் ஏன் சாகனும். கடவுளே!. சரி ஹாஸ்பிடல் போனபிறகு
அவருடைய உறவினர்களுக்கு தெரியபடத்தனுமே அவங்க யாருன்னு தெரியாதே நமக்கு அவருடைய கைப்பை பார்ததா எதாவது தெரியலாம் பைல டைரி மாதிரி ஒரு நோட் புக் மட்டும் இருந்தது அப்பா கண்டிப்பா எதாவது குறிப்பு இருக்கும். அவசர அவசரமா
புரட்டினா ம் எதுவும் தெரியல அவருடைய டைய்லி(daily) குறிப்புகளா தான் இருந்தது.

திரும்பவும் அவரிடமிருந்து சத்தம் டாக்டர் வேகமா எழுந்து அருகில் சென்றார் எனக்கு இதயம் நின்றுவிடும் போலிருந்தது. பெரும் முச்சிரைப்பு, டாகடர் வேகமாக நெஞ்சில் அறைந்தார். மீண்டும் ஒரு நீண்ட முச்சி இழுப்பு, பல அறைகள் எந்தவித பலனும்மில்லாமல்
அமைதியானார். என் மனது ஈரம் தோய்ந்த பஞ்சுப்போல கனத்துப்போனது.

டாக்டர் டரைவரிடம் எதாவது std பார்த்து நிறுத்த சொல்லிவிட்டு அருகில் வந்து வீட்டுக்கு சொல்லிட்ங்கன்னார். எனக்கு என்ன சொல்லுவதுன்னு தெரியல ஆனா அப்பவும் உண்மை சொல்ல தைரியம் வரல அதுவும் இல்லாம யாரு அவருடைய சொந்தம் எங்க
இருக்காங்க தெரியாது. நான் அமைதியா இருக்கறதை பார்த்திட்டு டாக்டர்,

கஷ்டம்தான் ஆகவேண்டியத பாருங்க.

இல்ல டாகடர் சொந்தம் இல்ல

ஒ சொந்தம் இல்லையா நீங்க மட்டும்தானா?

ம்.

சரி அப்போ cemetery போகலாமா?
இல்ல எலக்டிரிக் ஃப்ர்னஸ்.

அப்படியே விட்டுவிட்டு ஓடிடலாமான்னு தோணுது யாரோட அப்பாவோ? யாரோட கணவரோ? அப்படி ஓடிப்போனா இவங்க ஆனாத பிணமா எரிக்க போராங்க. மனசு அடிச்சிகுது எப்படி பட்டவரோ இபபடியா ஆகணும். கூடாது. என்ன ஆனாலும் சரி
யாரவது வந்து கேட்டா சொல்லிக்கலாம். இப்போ நாமலே கூட இருந்து செய்துடலாம்.

எரிச்சிடலாம் டாக்டர்.

முழுசா உள்ள போனவர் வரும்போது ஒரு சின்ன பொட்டலமா என் கையில் எனக்கு நிஜமாகவே அழுகை வந்தது. எதற்காக அவசர அவசரமா அந்த பாம் வெடிச்ச் இடத்திலிருந்து வந்தேனோ அது எல்லாம் மறந்து கனத்து நெஞ்சோடு என் இடம் வந்து
சேர்ந்தேன்.

வாட்ச்மெனிடம் ரும் சாவி வாங்கி போகும் அவன் "சார் நாளைக்கு நம்ம ஆனாத ஆசிரமத்துக்கு வருவதாயிருந்த மந்திரி வரலையாம் சார்".

என்னிடம் பெரிதாய் அதிர்ச்சியை எதிர்ப்பார்த்தவனிடம் எதுவும் சொல்லாமல் என் அறைக்கு வந்தேன். கனத்த நெஞ்சு உடைந்து வெகு நேரம் அழுதபடிய இருந்தேன். ஏதோ நினைத்து
கொண்டவனாக அந்த நோட் புக்கை மறுபடியும் புரட்டினேன். கடைசிக்கும் முதல் பக்கதில் எழுதுயிருந்தது.

My father and mother are dead,
Nor friend, nor relation I know;
And now the cold earth is their bed,
And daisies will over them grow.

an orphan

Thursday, July 06, 2006

நாய் குரைப்பின் காலங்கள்

நாய்க் குரைப்பின் பொருள் என்க்குத் தெரியும்போது
என் பொருள் சிக்கலும் விடுபட்டுப்போகும்.
என்னைச் சுற்றிச் சதா இந்த நாய்க் குரைப்பு
என் குடியிருப்பு அப்படி.

நாய்க் குரைப்பின் பொருள்பற்றி நான்
யோசிப்பது ஏனெனில்
வேறெங்கும் பொருளற்ற திவிரம் இப்படிப்
பீறிடுவதை நான் கண்டதில்லை என்பதாலேயே.

தன் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவையும் குவித்து
அடி வயிற்றை எக்கி,
சூன்யத்தில் தலை தூக்கி,
நாய்க் குரைப்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள்.

நாய்களுக்கு அவற்றின் குரைப்பின் பொருளோ
பொருளின்மையோ தெரியும்போது
அவை எப்படிக் குரைக்கும்?

குரைக்குமா?

ஒருசமயம் அவை குரைப்பதை விட்டு
வாலை மட்டும் ஆட்டிக்கொண்டிருக்கலாம்.
அந்தக் காலம் இப்போதைவிடவும் நன்றாக இருக்கும்.

...பசுவய்யா

Friday, June 30, 2006

And We Had Talk....

I'd travel to the ends of time
For you, my one, my only love.
I'd force the sun to leave its track
(If you were lost) to fetch you back.
I'd suck the juices from a lime,
I'd re-write Moby Dick in rhyme,
I'd happily commit a crime!
For you, my dearest darling dove.
I'd do it all, and more beside --

Now *would* you take the trash outside?
.
.
.
.
.
.
I've taken the trash out innumerable times,
I've taken the trash out in inclement climes,
I've taken the trash out 'cuz that's what I do,
But I *won't* take the trash out when you tell me to do.

Monday, June 26, 2006

மொழியும் அறிவும் - பெரியார்

மொழி என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியமான சாதனம் அல்ல அது இயற்கையானதும் அல்ல அதற்கு ஒரு கட்டாயமும் தேவையில்லை.

மொழி, மனிதனுக்குக் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு-விஷயங்களைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் அளவிற்குத் தேவையானதேயொழிய பற்றுக்கொள்ளுமளவிற்கு அவசியமானதல்ல.

மொழியானது சமுதாயத்திலுள்ள சூழ்நிலைக்கு ஏற்றதேயொழிய பொதுவாழ்விற்கு, உணர்ச்சிக்கு ஏற்றதல்ல. இந்த கருத்துக்களைக் கொண்டுதான் நாம் நமக்கு எந்த மொழி வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

நமக்குச் சொந்த மொழி என்பது - பிறந்த சாதியின் காரணமாக எனக்குக் கன்னடம் சிலருக்குத் தெலுங்கு பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் நாட்டுக்கு உரியது தமிழ்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு - தமிழ்நாட்டைப் பற்றி நினைத்துக்கொண்டு அரசியலுக்கானாலும், இலக்கியத்திற்கானாலும், போதனைக்கானாலும் ஒரு மொழி வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்கவேண்டியது தமிழ்மொழி என்பதாகத் தான் தோன்றும். அது ஓரளவிற்கு நியாயமாகும். ஆனால், நாடு நம்முடைய சொந்த நாடு ஆனாலும் ஆட்சி தமிழர்களல்லாத அன்னியர்களுடைய ஆட்சியாக இருப்பதால், அந்த அன்னியர்கள் பல நாடுகளை ஒன்று சேர்த்து அடக்கி ஆள்பவராக இருப்பதனால், அவர்களுடைய ஆட்சி நிலைப்பிற்கு, வசதிக்கும் ஏற்றபடி ஏதேதோ காரணங்களைச் சொல்லிக்கொண்டு, அன்னிய மொழியாகிய இந்தி மொழி என்பதுதான் ஆட்சி மொழியாகவும், கல்லூரி போதனா மொழியாகவும், பள்ளிகளில் கட்டாய மொழியாகவும் கூடி இருக்கவேண்டும் என்று ஆட்சியாளர்களால் வலியுறுத்தும் படியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டுவிட்டது. இது நமக்கு ஒரு மாபெரும் கெட்ட வாய்ப்பும் வெட்கப்படத்தக்கதான சம்பவமுமாகும்.

இந்த நாட்டில் மேற்கண்டபடி இந்தி மொழி கட்டாய பாடமாக்கப் (மொழியாக்க) படவேண்டும் என்பதற்கு அரசாங்கமும், இந்த நாட்டுப் பார்ப்பனர்களும், அவர்களின் அருளால் பிழைக்கவேண்டும் என்ற நிலையிலுள்ள பெரும்பாலோரும் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இந்தியைப் புகுத்தவும் கட்டாயப்படுத்தவும் இவைகளுக்காகத் தந்திரமான பல வழிகளைக் கோலவும் துணிந்து முன்வந்திருக்கிறார்கள்.

அதுபோலவே, தமிழ்மொழியை அரசியல் மொழியாகவும், கல்லூரி போதனா மொழியாகவும் பள்ளிகளில் கட்டாய மொழியாகவும் இன்னும் இலக்கிய மொழியாகவும் இருக்க வேண்டுமென்று தமிழர்களிடையே அரசியல்வாதிகள் என்போர்களும், மற்றும் புலவர்களும் இலக்கிய வாழ்வுக்காரர்களும், மற்றும் மொழிப்பற்று என்பதை சமயப் பற்றுபோல் முக்கிய பற்று என்று கருதுகின்றவர்களும் வலியுறுத்துகிறார்கள். கிளர்ச்சி வயப்பட்டவர்கள் இதற்காகக் கிளர்ச்சிகளும் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில், இந்த இரண்டு மொழிகள் பற்றியும் கவலையில்லை பிடிவாதமுமில்லை. இவற்றுள் இந்தி எந்த வகையிலும் நமக்குத் தேவையில்லை என்பதோடு கண்டிப்பாக நம் நாட்டிற்குள்ளே இந்தியைப் புகவே விடக்கூடாது என்பது எனது கருத்தாகும். எந்தத் துறையில் நமது நாட்டிற்குள் இந்தி புகுந்தாலும், சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்கு வந்து தொல்லையும் மடமையும் இழிவும் அனுபவிக்கிறார்களோ, சற்றேக் குறைய அந்த நிலைமைக்குத்தான் நம்மைக் கொண்டுபோய்விடும் என்பது எனது துணிபு. இந்தி, தமிழ் நாட்டையும் தமிழனையும் வட நாட்டானுக்கு-பார்ப்பனருக்கு அடிமைப்படுத்துவதல்லாமல் வேறு எந்த காரியத்திற்கும் பயன்படாது.

இந்தி ஆட்சிமொழியாய் இருக்கிறதெ என்றால், நாம் உலகம் உள்ள அளவும் வட நாட்டானுக்கு அடிமை ஆக இருப்பது என்று முடிவு செய்துகொண்டோமா? தமிழ் நாடு ஒரு நாளைக்கும் அன்னியன் ஆதிக்கம் இல்லாத சுதந்திர நாடாக இருக்கக்கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் நிலையா? அப்படி இல்லை என்றால், இன்றைய அன்னிய நாட்டான் ஆதிக்க ஆட்சியைத் தற்கால (தற்காலிக) ஆட்சி என்றுதானே சொல்ல வேண்டும்?

மற்றும் இந்திமொழி, கலாசாலை போதனைக்கோ, இலக்கிய போதனைக்கோ, ஆட்சிமுறை போதனைக்கோ வேறுமொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்த்து நம் நாட்டிற்குள் புகுத்த வேண்டிய அளவில்தான் இருக்கிறதே தவிர-மற்றபடி மூல நிதி (பொக்கிஷம்) அதில் என்ன இருக்கிறது? இன்று சட்ட அறிவோ, கலை அறிவோ, பொறியியல் அறிவோ, வைத்திய அறிவோ, விஞ்ஞான அறிவோ அளிக்கத்தக்க நேரிடைச் சாதனம் இந்திக்கு என்ன இருக்கிறது?

நிற்க, தமிழை எடுத்துக்கொண்டாலும் இன்று உலக ஞானத்தில் முற்போக்குத் தன்மையில் தமிழுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? தமிழனுக்கு முதலாவது தெளிவான நேரான சரித்திரம் இல்லை.

தமிழனுக்கு அதுபோலவே சமய ஞான சாதனமும் இல்லை. இவை மாத்திரமல்லாமல், தமிழனுக்கு என்று - ஆரிய ஆதிக்கமும் கலப்பும் அற்ற இலக்கியமும் இல்லை. அதாவது, ஆரியர் வரவுக்கு முந்தியது என்று சொல்லத்தக்க வண்ணம் விவகாரத்திற்கு இடமில்லாத தன்மையில் எதுவும் கிடைப்பது அருமையாகத்தான் இருக்கிறது. தமிழ் மொழி வேண்டுமானால் ஆரியத்திற்கு முந்தியது என்று ஒப்புக்கொள்ளலாம். அதுவும் தமிழனுக்கு இன்றளவும் என்ன பலனைக் கொடுத்திருக்கிறது? விஞ்ஞானத்திற்குச் சிறிதும் பயன்படத் தக்கதாய் இல்லை அறிவுக்கும் தக்கபடி பயனளிக்க முடியவில்லை. தமிழ்மொழி ஏற்பட்டுப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் அதைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் இன்னும் - இந்த விஞ்ஞானப் பரவல் காலத்திலும் உலகில் எங்கும் இல்லாத அளவு மூட நம்பிக்கை உடையவனாகவும், மான உணர்ச்சி என்பது 100-க்கு 75 பாகம் இல்லாதவனாகவும் இருந்துவருகிறான். மனித வாழ்விற்கு மொழி முக்கியம் என்றால் - உலகில் மற்ற மொழி நாடுகளைக் காணும்போது தமிழ் நாட்டுக்குத் தமிழ் என்ன பயன் அளித்திருக்கிறது?

தமிழை வளர்க்கவேண்டும் என்பதெல்லாம் கலைத்துறையிலோ, விஞ்ஞானத் துறையிலோ, மற்றும் சில துறைகளிலோ வேறு மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்கின்ற நிலைதானே தமிழுக்கு இருந்து வருகிறது?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ் மொழியானது, மொழியில் ஆகட்டும், பொருளிலாகட்டும், எழுத்திலாகட்டும், வேறு முறைகளிலாகட்டும் எவ்வித முன்னேற்றமும் மாறுதலும் அடையவில்லை. உலகத்திலேயே நீதி சிறந்த இலக்கியம் - குறள் தமிழில் உள்ளது. அது துருப்பிடித்துவிட்டது. என் அனுபவத்திற்கு எட்டியவரையில் உலகத்திலே சிறந்த துறை அறிவு தமிழிலுள்ள கணக்குமுறை, அதாவது இளஞ்சுவடி என்றும் எண் கணக்கு என்றும் சொல்லக்கூடிய இலக்க முறை. அது குப்பைக்கே போய்விட்டது. இவை இரண்டையும் கழித்துவிட்டால் தமிழில் இருந்து - தமிழன் தெரிந்துகொள்ளத் தக்கதோ தமிழனுக்குப் பயன்படக் கூடியதோ எதுவும் தென்படவில்லை. தமிழும் தமிழனும் பெரும்பாலும் பழங்காலச் சின்னமாகக் காணப்படுகின்றன.

தமிழனின் பேச்சுமொழி, தாய்மொழி-தமிழ் என்பதைத் தவிர, தமிழருக்கு வேறு உலக முக்கியத்துவம் எதுவும் எனக்குத் தென்படவில்லை. மற்றபடி, தமிழ் நாட்டிற்கு, தமிழருக்கு வேறு எந்த மொழி தேவையானது - நல்லது அரசியல், விஞ்ஞானம், கலை முதலியவைகளுக்கு ஏற்றது - பயன்படக்கூடியது என்று என்னைக் கேட்டால் - எனக்கு, ஆங்கில மொழிதான் சிறந்தது என்று தோன்றுகிறது. இது எனக்கு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னமேயே தோன்றிய எண்ணமாகும்.

நான் 1939-ல் கோவைக் கல்லூரியில் அதன் பிரின்ஸிபாலின் தலைமையின் கீழ் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசும்போது எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அந்தச் சமயம் நான் இந்தி எதிர்ப்புக்காக சிறைசென்று - சிறையினின்று விடுதலையாகி வந்த பிறகு, கல்லூரி மாணவர்களால் அழைக்கப்பட்டு "மொழி" என்னும் தலைப்பில் பேசிய பேச்சில் குறிப்பிட்டுருக்கிறேன். அந்தத் தலைப்பில் மொழியின் பயன் என்ன? பயனுக்கேற்ற மொழி எது? என்று 2 பிரிவுகளாய்ப் பிரித்துக் கொண்டு பேசியிருக்கிறேன். அப்பேச்சில் ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கணக்காக - அகர வரிசையாக எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால் அதற்கேற்ப தமிழ் எழுத்தையே எடுத்துக்கொள்ளலாமென்றும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சுமொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன். சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்ட காலத்தில் எல்லாக் கட்சிக்காரகளும் வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்றும் பேசினார் பிறகு நான் பேசும்போதும் அதுபோலவே பேசிவிட்டு, ஆங்கிலம் பேச்சு மொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்றும் சொன்னேன். அதே சமயம் இப்படி நான் சொல்வதால், மொழி வெறியர்கள் சிலர் என்னை, "நீ யாருக்குப் பிறந்தாய்?" என்றுகூடக் கேட்டார்கள். "அந்த மொழியைப் பேச வேண்டும் என்று சொல்வதானால் நாம் ஆங்கிலேயனுக்குப் பிறப்பதானால், மற்றபடி காப்பி குடிப்பது முதற்கொண்டு இரயில், ரேடியோ, ஆகாய விமானம், டெலிபோன், மருந்து முதலியவை ஆங்கிலேயனுடையவை என்று தெரிந்து தெரிந்து அனுபவிக்கிற நாம் எத்தனை தடவை ஆங்கிலேயனுக்குப் பிறந்தவர்களாவோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால், மொழி பேசுவதானால் ஆங்கிலேயனுக்குப் பிறந்தவனாகமாட்டோம்" என்று சொன்னேன். தமிழரின் மூலமோ தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம், தமிழ்ப் பண்பாடு மூலமோ நாம் உலக மக்களின் முன்னிலையில் ஒருநாளும் இருக்க முடியாது.

தமிழ் வடமொழியைவிட இந்தி மொழியைவிடச் சிறந்தது என்பதிலும், பயன்படத்தக்கது என்பதிலும் எனக்கு அய்யமில்லை என்றாலும், நாம் இன்றைய நிலைமையைவிட வேகமாக முன்னேற வேண்டுமானால் - ஆங்கிலந்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனா மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும், ஆங்கிலம் நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்

Wednesday, June 21, 2006

நீதி எனப்படுவது

இரண்டாவது உலக யுத்த சமயத்தில், மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கினார். யுத்தத்தை எதிர்த்து ஒருவர் பொது இடத்தில் பிரச்சாரம் செய்வார். அவரைக் கைது செய்து சிறையிலடைத்தாலும், வன்முறை எதிலும் ஈடுபடாத காரணத்தினால்
சிறையிலிருந்து ஜாமீன் பெற்று வெளி வந்து மீண்டும் பிரச்சாரம் செய்வார். இதைத் தவிர்ப்பதற்காக அன்றைய ஆங்கிலேய அரசு, இவ்வாறு கைதானவர்கள் ஜாமீனில் வெளிவராமல் தடுக்க 'Criminal law amendment act' ஐ அறிமுகப்படுத்தியது.
இன்றைக்கும் அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருவது யாரை ஒடுக்க ?...

அடிப்படையில் ஆங்கிலேய காலத்துச் சட்டத்தைச் சார்ந்திருந்தாலும், நமது சட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் நலம் சார்ந்த சட்டங்கள் இந்திய விடுதலைக்குப் பின்பே உருவாக்கப்பட்டவை. அப்பொழுதெல்லாம் ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டுக்
கடுங்காவல் தண்டனை. வ. உ.சி. க்கு விதிக்கப்பட்ட இரண்டு ஜென்ம தண்டனை என்பது நாற்பது வருட கடுங்காவல் தண்டனையே ஆகும். இப்பொழுது ஆயுள் தண்டனை பதினான்கு
ஆண்டு சிறை வாசமாகக் குறைக்கப்பட்டுவிட்டது. சாட்டையடி போன்ற ஈவிரக்கமற்ற தண்டனைகளும் ஒழிக்கப்பட்டு விட்டன. சர்வசாதாரணமாய்ப் புழங்கிக் கொண்டிருந்த தூக்கு தண்டனை இப்பொழுது மிகவும் அரிய குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. (ஆனால், இன்னமும் எடுத்ததற்கெல்லாம் தூக்குதண்டனை கொடுத்து அதை ஒரு கேலிப் பொருளாக
மாற்றிய, மாற்றிக் கொண்டிருக்கும் பெருமை திரைப்படங்களுக்கு உண்டு) அப்படியும் மக்கள் நம்பிக்கையை நீதிமன்றங்கள் இழந்து வருகின்றன. மேம்படுத்துதல் நடைபெறாத எந்தத் துறையும் ஒட்டடை படிந்தே காணப்படும். இன்றைய நீதித்துறை, வழக்குகளை
விசாரிக்க ஏற்படுத்தும் காலதாமதம் எதனால் ஏற்படுகிறது?

சாதாரணமாகக் கொலை வழக்குகள் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் போன்றவை துரிதமாக நடைபெறும். (அப்படியும் 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு' முடிவதற்குள் இரு தேர்தல் காலம் முடிவடைந்து விட்டது). சாதாரண வழக்குகள் சவ்வு
போல இழுத்துக்கொண்டே போகும். சாதாரணமாக ஒரு பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட வழக்கு முடிவதற்குப் பத்து ஆண்டுகளாகின்றன.

இந்தியச் சட்டத்தில் விரைவில் வழக்கை முடிப்பதற்கு எவ்வித வழியும் இல்லை. ஆனால் வழக்கைத் தாமதப்படுத்த அநேக வழிகள் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் வழக்குகள் குறைவாய் இருந்தன. அப்பொழுது கடைப்பிடிக்கப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள்
இன்றைக்குப் பயன்படாது. எனினும் ஆங்கிலேயர் காலத்து நீதிமன்ற நடைமுறைகளே இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஒரு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு எண் வழங்குவதற்கு இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. அதற்குப் பின்
அனுப்பப்படும் சம்மன்களை எதிர்த்தரப்பு, நிர்வாக ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து 'எதிர்த்தரப்பினர் ஊரில் இல்லை' எனச் சொல்ல வைத்து, ஆறு மாதத்திலிருந்து ஓராண்டு வரை இழுத்தடிக்கலாம். 'வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லை' என்றோ, 'வழக்கில் ஈடுபடுத்தப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை' என்றோ ஆயிரமாயிரம் பொய் சொல்லி 'வாய்தா' க்கள் வாங்கலாம்.

நீதிமன்றம் தொடங்கிப் பத்தரை மணி முதல் பன்னிரெண்டரை மணி வரை இரண்டு மணி நேரம் நீதிபதி வழக்கு எண் போடுதல், தேதி கொடுத்தல் போன்ற பணிகளுக்கே சரியாகப் போய் விடுகிறது. இது போன்ற நிர்வாகப்பணிகள் நீதிபதியின் பொறுப்பிலிருந்து அகற்றப்பட
வேண்டும். வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தல் என்பது மட்டுமே நீதிபதியின் பணியாக இருக்க வேண்டும்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழக்குத் தொடங்குவதற்கு ஒரு மாத கால அவகாசமும், முடிவதற்கு ஓராண்டு கால அவகாசமும் மட்டுமே தரப்படுகின்றன. வழக்கில் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகவில்லையெனில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படும்.

வழக்குகள் தூரிதமாக நடைபெற மக்கள் நீதிமன்றங்கள் என்றழைக்கப்பட்ட 'லோக் அதாலத்' அறிமுகப்படுத்தப்பட்டது என்னவோ உண்மை. ஆனால், இரு தரப்பினரும் விரும்பினால்
மட்டுமே வழக்கினை 'லோக் அதாலத்தில்' நடத்த முடியும். இதனால் பெரும்பாலான வழக்குகள் வழக்கமான நீதிமன்றங்களிலேயே நடைபெறுகின்றன.

நவீன விஞ்ஞான வளர்ச்சியைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாதது நீதித்துறை பற்றிய மற்றொரு குறையாகும். இந்திய சாட்சிய சட்டம் (Indian evidence act) மாற்றப்பட வேண்டியது காலத்தின் தேவையாகிறது. ஜெராக்ஸ் பிரதிகளை எதிர்த்தரப்பு ஒப்புதல்
கொடுத்தால் மட்டுமே நீதிமன்றம் சாட்சியமாக அங்கீகரிக்கும். விடியோ பதிவுகள் போன்றவை இரண்டாம் தர சாட்சியமாகக் கருதப்படுமே தவிர முதன்மை சாட்சியாக (Primary evidence) ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. தீர்ப்பு நகல்களை நீதிமன்றத்திலிருந்து பெறுவதற்கே கூட சில நேரங்களில் ஏழெட்டு மாதங்களாகி விடுகின்றன.

D.T.P. போன்ற நவீன வசதிகளை உபயோகப்படுத்தினால் உத்தரவு நகல்கள் ஓரிரு வாரங்களில் தயாராகிவிடும். உயர்நீதிமன்றத்தில் பெயில் கொடுப்பதற்கு அச்சடிக்கப்பட்ட
'format' உபயோகப்படுத்துகிறார்கள். அதை எல்லா நீதிமன்றங்களும் கடைப்பிடிக்கலாம்.

நீதிமன்றத்தில் உடனடியாகக் களைந்தெறியப்பட வேண்டியவைகளில் முதன்மையானது ஊழல். உச்ச நீதிமன்றத்திலிருந்து பெஞ்ச் நீதிமன்றம் வரை ஊழல் என்பது தலைவிரித்தாடுகிறது. நீதிபதியின் தேர்வுக்கு அவரது குணத்தை விட செல்வாக்கே கருத்தில்
கொள்ளப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

நீதித்துறையை ஆராய்வதற்கென பல கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் பொழுது செய்தித்தாள்களில் இடம் பெறுவதைத் தவிர இந்தக் கமிஷன்கள் பெரும்பாலும் மக்கள் தொடர்பற்றே இருக்கின்றன. பல ஊர்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டறியப்படாமலே கமிஷன்கள் செயல்படுவது எவ்வித
நன்மையையும் பயக்கப் போவதில்லை. தேங்கிக் கிடக்கும் வழக்குகள், கமிஷன் அறிக்கைகளைக் கிடப்பில் போடுவது போன்றவற்றை மாற்றவே இன்னும் அரசாங்கம் முயலாதபொழுது அரசாங்க அமைப்பின் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவது அரசியல்
நகைச்சுவையாகிவிட்டது.

மக்களைப் பற்றிய அக்கறை கொண்ட எந்தவொரு சமுதாய அரசியலமைப்பும் தனது குறைகளை நிவர்த்தி செய்தபடி மேலும் மேலும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கும்.
அரசியலமைப்பில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யாத இந்திய அரசாங்கம், சில விஷயங்களில் எவ்வளவு வேகமாய்ச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணத்திற்குப் பஞ்சாப் தீவிரவாதிகளின் நவீன ஆயுதங்களை
எதிர்கொள்ள அம் மாநிலக் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட ஸ்டென் துப்பாக்கிகள் இன்று எல்லா மாநிலக் காவல்துறையினர் கைகளிலும் காணக் கிடைக்கிறது!

ரப்பர், பிளாஸ்டிக் குண்டுகள், தண்ணீர் பீரங்கி என்று பொதுமக்களிடையே அதிகம் சேதத்தை, உயிர்ப்பலியை ஏற்படுத்தாத ஆயுதங்களை வெளிநாட்டுக் காவல்துறையினர் பயன்படுத்தும்போது, இங்கிலாந்து இறக்குமதிச் சட்டங்களை இன்னமும் கடைப்பிடித்துக்
கொண்டிருக்கும் நாம், பொதுமக்களுக்கெதிராகக் காவல்துறையினர் கையாளும் வன்முறை ஆயுதங்களுக்கு மட்டும் இன்னமும் விடை கொடுக்காமல் இருப்பது வன்முறைக்கு மேலும் வித்திடுவதாய் அமையாதா?

Tuesday, June 13, 2006

இவர்களுக்கும் ஒரு ஜாதி Please..

தெருவோரம் கம்பி மேல நடந்து, ஆட்டம் ஆடி, பல்டி அடிச்சி வேடிக்கை காட்டி வாழ்கை நடத்துகின்ற அந்த மக்களை கவனிச்சிருக்கிங்களா? இல்லைன்னா உங்க வீட்டு வாண்டுகளை
கேட்டுப்பாறுங்க தெரியும். மக்கள் வேடிக்கை பார்த்து கைத்தட்டி கொடுக்கும் சன்மானம் தான் அவர்கள் வருமானம்.

எங்கிருந்து வந்தோம், எங்கு வாழ்வதுன்னு தெரியாத அவலநிலை இவர்களுடையது.நினைவு தெரிந்த காலம் முதல் இவர்கள் இப்படிதான், இவர்கள் முன்னோர்களும் தெரு கூத்தாடிகள்தான்.

கிட்டதட்ட இரண்டு நூற்றாண்டிடுகளா தமிழகத்தில ஊர் ஊராக சுற்றி கூத்தாடி வருகின்றனர். சென்ற ஊரே சொந்த ஊர் இன்பமோ துன்பமோ இறப்போ, பிறப்போ பயணங்கள் நிற்பதில்லை இறந்தால் அங்கேயே புதைத்து விட்டு அடுத்த வேலை உணவுக்காக
தொடரும் பயணம்.

சில வருடங்களுக்கு முன் தங்களுக்கும் ஒரு இடம் வேண்டி புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தனர். எம்.ஜி.ஆர் காலத்தில இவர்களுக்கு இந்த நிலங்களை பட்டாமனைகளா வழங்கப்பட்டன. அதிக குழந்தைகள் இருந்தால் அதிக வருமானம். குலத்தொழிலுக்காக
முளையிலேயே கிள்ளி எறியப்படுகிற கல்வி.

அப்படியே விதிவிலக்காக படிக்கிற பிள்ளைகள் கூட மேற்கல்வி தொடர முடிவிதில்லை காரணம் இவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட ஜாதி இல்லை.

ஜாதி ஒழிக்க விவாதிங்கள் போராடுங்கள், ஆனா அதுவரைக்கு இவர்களுக்கும் ஒரு ஜாதி Please.. ஏன்னா ஜாதி இல்லையேல் கல்வி இல்லை என்பது சமுதாயத்தின் நிலை.

Wednesday, June 07, 2006

சும்மா இருக்கதான் ஆசைப்படுகிறேன்


நான் யார் என்று சொல்லாமல்
நீ யார் என்று கேட்காமல்
சும்மா இருக்கதான் ஆசைப்படுகிறேன்

அவன் இவன் உவன்
யாரைப்பற்றியும் தெரிந்துக்கொள்ளாமல்
சும்மா இருக்கதான் ஆசைப்படுகிறேன்

எரியும் கூரையின் மேல் நிலவு
படத்தை வெறுக்காமலும் ரசிக்காமலும்
சும்மா இருக்கதான் ஆசைப்படுகிறேன்

நீண்ட வாக்கியம் படித்தாலும்
துளி தேன் ருசித்தாலும்
சும்மா இருக்கதான் ஆசைப்படுகிறேன்

நீ பார்த்த பார்வையும்
போன பின்பிருந்த வெற்றிடத்தை
பார்த்தால் மட்டும்.

Monday, June 05, 2006

குரங்கு கேட்கிறது - விந்தன்

'மனம் ஒரு குரங்கு' என்று சொல்லிக் கொள்வதோடு மனிதர்களான நீங்கள் நிற்பதில்லை. ஆதியில் என்னிலிருந்து வந்ததாகவே நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அதையும் சாதாரணமாகச் சொல்லிக் கொள்ளவில்லை. ஆராய்ச்சி பூர்வமாகச் சொல்லி கொள்கிறீர்கள். அதற்கென்றே 'டார்வின் சித்தாந்தம்' என்று ஒரு தனி சித்தாந்தத்தையே உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப் போனால் அதை ஒரு பெருமையாகக் கூட நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்!

நாங்கள் அந்த அளவுக்கு எங்களுடைய பெருமையைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம் உங்களுக்கு மட்டுமே இருப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்ளும் 'பகுத்தறிவு' எங்களுக்கு இல்லாமல் இருப்பதுதானோ என்னவோ?

இராம-இராவண யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக உங்களில் சிலருக்கு நாங்கள் வணக்கத்துக்குரிய ஜீவன்களாக இருந்து வருகிறோம். ஆயினும் என்ன! கடவுளரைக் குறிக்கும் விக்ரகங்களை வேண்டுமானால் நீங்கள் 'நைவேத்தியம்' என்ற பேரால் பழம், பட்சணம் வைத்து வணங்குவீர்கள் - அவற்றை எடுத்து அவை தின்று விடாது என்ற தைரியத்தில்! எங்களை வணங்கும் போதோ? - 'ராம ராமா!' என்று கன்னத்தை வலிக்காமல் தொட்டுக் கொள்வதோடு சரி!

இதனால் என்ன நடக்கிறது? - எங்களுக்கு வேண்டியதை நாங்கள் உங்களிடமிருந்து தட்டிப் பறித்தே தின்ன வேண்டியிருக்கிறது.

நாங்கள் மட்டும் என்ன, நீங்களும் ஒருவரை ஒருவர் நாசூக்காக, நாகரிகமாகத் தட்டிப் பறித்தே தின்று கொண்டிருக்கிறீர்கள்!

இது உங்கள் பிறவிக் குணம். நீங்களாக யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டீர்கள். அப்படியே கொடுத்தாலும் எதாவது ஒரு லாப நோக்கோடுதான் கொடுப்பீர்கள். நல்ல வேளையாகக் கடவுள் உங்கள் கண்ணில் படுவதில்லை. பட்டால் அவருக்கு எதிர்த்தாற் போலேயே யாராவது பிச்சைக்காரனுக்கு ஒரு காசை எடுத்து தாராளமாக தருமம் செய்து விட்டு, 'நான்தான் தருமம் செய்து விட்டேனே, எங்கே எனக்கு மோட்ச சாம்ராஜ்யம்? கொண்டா!' என்று கூசாமல் கேட்டாலும் கேட்பீர்கள்!

'இருப்பவன் எதையும் எதிர்பாராமல் இல்லாதவனுக்குக் கொடுப்பது' என்ற ஒரு தருமத்தை மட்டுமாவது நீங்கள் அன்றிலிருந்தே கடைப்பிடித்து வந்திருந்தால், இன்று உங்களிடையே திருடர்களும் கொலைகாரர்களும் ஏன் உருவாகியிருக்கப் போகிறார்கள்?.

அல்லது 'இந்த உலகத்தில் காணும் எல்லாமே எல்லாருக்கும் சொந்தமானவை. இவற்றில் உனக்கு, எனக்கு என்று எதுவும் இல்லை' என்ற 'வேதாந்த' த்தை எங்களைப் போலவே நீங்களும் உண்மையாகவே கடைப்பிடித்து வந்திருந்தாலும் உங்களிடையே 'இருப்பவன்' என்றும், 'இல்லாதவன்' என்றும், இப்போது எவனும் இருந்திருக்க மாட்டானே!

போகட்டும். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா? - உங்களுக்குத் 'தன்னம்பிக்கை' இல்லாமற் போனதுதான்.

அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லையென்றாலும் உங்கள் குழந்தைகளுக்காவது இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?

அதுவும் இல்லை.

நான்தான் சில சமயம் உங்கள் வீட்டுக் கூரையின் மேல் உட்கார்ந்து கொண்டு உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறேனே! - நீங்கள் பல் தேய்ப்பதைப் பார்த்து விட்டு உங்கள் குழந்தை தானும் பல் தேய்க்க எண்ணிப் பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் கையில் எடுத்தால் போதும், 'வேண்டாண்டா கண்ணு உனக்குத் தேய்க்கத் தெரியாது. இப்படி கொண்டா, நானே தேய்த்து விடுகிறேன்!' என்று நீங்களே அதற்குப் பல் தேய்த்து விடுகிறீர்கள். குளிக்கப் போனால் உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!' என்று நீங்களே அதைக் குளிப்பாட்டி விடுகிறீர்கள். சாப்பிடப் போனால், 'உனக்குத் தெரியாதுடா, இப்படி வா' என்று நீங்களே அதற்கு ஊட்டி விடுகிறீர்கள். உடை அணிந்து கொள்ளப் போனால் 'உனக்குத் தெரியாதுடா, இப்படி வா!' என்று நீங்களே அதற்கு உடை அணிவித்து விடுகிறீர்கள்.

எல்லாம் முடிந்து பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது 'அப்பா! பென்சில் வாங்க வேண்டும். காசு தா? என்று கேட்டாலோ, 'உனக்கு என்ன தெரியும், பென்சில் வாங்க? வா நானே வாங்கித் தருகிறேன்!' என்று அவனைக் கையோடு கடைக்கு அழைத்துப் போய்ப் பென்சில் வாங்கித் தந்துவிட்டு, 'பார்த்துப் போ, பத்திரமா போ! பார்த்துப்போ, பத்திரமா போ!' என்று ஆயிரம் 'பார்த்து'களும், ஆயிரம் 'பத்திர'ங்களும் சொல்லி அனுப்பி விட்டு வருகிறீர்கள். முடிந்தால் பள்ளி வரை சென்று அவனை அங்கே உட்கார வைத்த பின்னரே நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்கள்.

அதாவது, எடுத்ததற்கெல்லாம் 'உனக்கு ஒன்றும் தெரியாது, உனக்கு ஒன்றும் தெரியாது' என்று சொல்லிச் சொல்லியே அவனை ஒன்றும் தெரியாதவனாக வளர்த்து, எதற்கும் தன்னை நம்பி வாழாமல் பிறரை நம்பி வாழக் கூடியவனாக அவனை உருவாக்கி விட்டு விடுகிறீர்கள்!.

ஓ மனிதா ! என்னையும் என் குட்டியையும் சேர்ந்தாற் போல் எங்கேயாவது பார்த்திருக்கிறாயா நீ? - 'ஐயோ, குழந்தைக்கு ஒன்றும் தெரியாதே! தவறிக் கீழே விழுந்து விடுமே!' என்று நான் அதை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன். அதுதான் என்னை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கும். அதுவும் எப்படி? - என் முதுகைத் தன் கால்களால் சுற்றி வளைத்துப் பிடித்தபடி, அடி வயிற்றில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். நானோ அதைக் குனிந்து கூடப் பார்க்காமல் கிளைக்குக் கிளை, மரத்துக்கு மரம் இரை தேடித் தாவிக் கொண்டே இருப்பேன். அப்படித் தாவும்போது, 'பத்திரம், கெட்டியாகப் பிடித்துக் கொள்,' என்றோ 'விழுந்துவிடப் போகிறாய், ஜாக்கிரதை!' என்றோ அதனிடம் சொல்லி, அதை எச்சரித்தாவது வைப்பேன் என்கிறீர்களா? - மாட்டேன். தன்னைத் தானே தான் அது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். 'என்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்' என்ற எண்ணம் அதற்குள் எழுந்து விட்டால், பிற்காலத்தில் அது தன்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?

இப்படிச் செய்வதால், 'எனக்கு அதன் மேல் அன்பே கிடையாது' என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். உண்டு. நானும் உங்கள் வீட்டுப் பெண்களைப் போல அதை என் முன்னங்கால்களால் அணைத்துப் பிடித்துக் கொண்டு பால் கொடுப்பதுண்டு - ஆனால் எதுவரை? - அதற்கு இந்த உலகம் தெரியும் வரை. தெரிந்த பின்? - எதற்கும் பிறரை அது ஏன் எதிர்பார்க்க வேண்டும்? ஏன் எதிர்பார்க்க விட வேண்டும்?

புலி இருக்கிறதே புலி, அதற்கு எங்களைக் கண்டால் வெல்லம். நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு அது எங்களைச் சுற்றிச் சுற்றி வரும். சில சமயம் அது எங்களைப் பிடித்துத் தின்ன மரத்தில் கூடத் தாவும். அதற்குப் பயந்து நாங்கள் வானளாவி வளர்ந்துள்ள மூங்கிலின் உச்சிக்குப் போய்விடுவோம். அந்த மூங்கிலோ எங்கள் கனத்தைத் தாங்காமல் 'ஸ்பிரிங்' போல் உதைத்துக் கொண்டு அப்படியும் இப்படியுமாக வீசி வீசி ஆடும். அந்த ஆட்டத்தில் சில சமயம் எங்களை வளைத்துப் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருக்கும் எங்கள் குட்டிகள், பிடி தளர்ந்து கீழே விழுந்து விடுவதுண்டு. அப்போதும் அவற்றைக் காப்பாற்ற நாங்கள் விரைந்து செல்வோம் என்கிறீர்களா? - மாட்டோ ம். தட்டுத் தடுமாறி எழுந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்றுதான் அவற்றை விட்டு விடுவோம்...

இம்மாதிரி சமயங்களில் அவை காணாமற் போனால் கூட அவற்றைத் தேடி நாங்கள் அலைவது கிடையாது. ஏனெனில், என்றாவது ஒருநாள் அவையே எங்களைத் தேடி வந்துவிடும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவற்றைத் தேட மாட்டோ ம் என்பதும் அவற்றுக்குத் தெரியும்.

மனம் விட்டுச் சொல்கிறேனே! இயற்கையாக இல்லாத பந்தத்தையும் பாசத்தையும் உங்களைப் போல் அவ்வப்போது விலை கொடுத்து வாங்கிக் கொண்டு, அவற்றுக்காக ஒருவருக்கு ஒருவர் பாரமாக இருந்து கொண்டு, சதா தொல்லையில் உழன்றபடி வாழும் வாழ்வு எங்களுக்குப் பிடிப்பதே இல்லை.

அப்படியிருக்க, எங்களிலிருந்து வந்ததாக நீங்கள் எப்படித் தான் சொல்லிக் கொள்கிறீர்களோ, அதுதான் எங்களுக்குத் தெரியவில்லை.

நன்றி : 'ஓ, மனிதா! ' (கட்டுரைத் தொகுப்பிலிருந்து)
ஆசிரியர் : விந்தன்
வெளியீடு : புத்தகப் பூங்கா

Friday, June 02, 2006

ஜனநாயகம் ஏன்? எப்படி? என்ன?

நம்ம மன்னர் இருக்காரு இல்லிங்க மன்னர் அவரு மொத்த அதிகாரத்தையும் வச்சிகிட்டு கொஞ்சமா இந்த நிலக்கிழார், மந்திரி, மத குரு அப்படின்னு சில பேர்களிடம் மட்டுமிருந்தது அதிகாரம்.

சி(ப)ல காலக்கட்டத்துக்கு பிறகு அதாங்க இந்த இயந்திர உற்பத்தி அதிகரிச்ச காலல்கட்டத்தாங்க, அப்போ இந்த முதலாளிகள் ( முதலாளித்துவம்) தொழிலாளர்களின் துணையுடன் மன்னர் கிட்ட இருந்த அதிகாரத்தை புடிங்கி கிட்டாங்க.

அப்படியே தொழிலாளர்களுக்கும் ஆட்சியில பங்கு தருவதாக சொல்லி நாடாளுமன்றம், தேர்தல், இதன் அங்கத்தவரை தேர்தெடுக்கும் முறை அப்படின்னு சொல்லி அதாங்க இந்த
ஜனநாயக முறை அத கொண்டுவந்தாங்க.

இதல பாருங்க இந்த நாகரிகமான தேர்தல் முறையல வயதுவந்த ஆண்களூக்கு மட்டுமே முதல்ல வாக்குரிமை இருந்தது அப்புறம் இந்த நூற்றாண்டுல தான் பெண்களுக்கான வோட்டுரிமை.

இத்தகைய ஜனநாயகம் என்னன்னா முன்னேற்றமான நாகரிகமான அரிசியல் முறையாம். ஏன்னா இத்தகைய ஆட்சி பெரும்பான்மையினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாட்சே.
பெரும்பான்மையினர் சொன்னா அதுவே நீதி அதுவே மரபு.

அப்படியே இந்த மொழி,இனம்,நிறம்,மதம்,சாதி, தொழில்,பால்நிலை சார்ந்த சிறுபான்மையிரான மக்களை ஒடுக்குவது பெரும்பான்மையினர் நீதியாகிறது, அஃதே ஆட்சியின் நீதி.

Tuesday, May 30, 2006

நானும் காற்றில் கத்தி வீசுகிறேன்

யாரின் முகமூடி கிழிக்கவோ
திறந்த முகத்தில்
குத்தி கூர்பார்கவோ அல்ல

எமக்கான விளையாட்டு
காற்றில் கத்தி வீசுவது

என் தூரம் அறிந்தே வீசுகிறேன்
எல்லைக்கு உட்பட்டு

மழுங்கிய கத்தி கொண்டே
வீசுகிறேன்
காற்றை கிழிக்கும்
ஓசை எனக்கானது

காற்றின் அறைகூவல் வீசட்டும்
மணலில் கத்தி சொருகி
நிலை கொண்டிருப்பேன்
அது ஓயும்வரை

ஒளி, ஒலி பிழை
இருக்கலாம்
காற்றை கிழிப்பதில்
இருக்கிறது விளையாட்டின்
வெற்றி எனக்கும்
பிரிகையில் காற்றுக்கும்

இதுவரை தோற்றாலும்
இது ஒரு விளையாட்டு
அவ்வளவே!

Monday, May 29, 2006

குஷ்பு பார்க்க போன முருகன்

அதோ அந்த ஓரத்துல நிக்குறானே அவன்தான் முருகன்.நாங்க பிஸ்சி படிக்கும்போது எடுத்தது.பாண்டிசேரி தான் அவன் சொந்த ஊர். ஆரம்பத்தில படம் வரைவதில் எனக்கும் அவனுக்கு உரசலிருந்தாலும் அந்த திறை விலக்கி வெக்கப்படுற குஷ்பு படம் வரைஞ்சதலிருந்து அவன்தான்னு முடிவாகி திக் ஃப்ரண்ட்ஸாகிட்டோம்.

அவன் அறை முழுவதும் கட்டுடைத்தலைவின் படம்தான் எப்படியிம் அவஙகள நேர்ல பார்த்திடனும் சொல்லிகிட்டே இருப்பான் அதுவும் இந்த வேலு இருக்கானே அதுக்கு தூபம் போடறதே வேலை.இப்படித்தான் லீவுக்கு கோபிச்செட்டிப்பாளையம் போயிவந்த வேலு அங்கன எடுத்த ஃபோட்டோ காட்டி ரொம்ப அலும்பு பண்ணிட்டிருந்தான் தோ இந்த மரத்த பாரு இங்கன தான் சின்னதம்பி படத்தில குஷ்பு உக்காந்த ஆடுன மரம், இதோ
இந்த வாய்க்கால்லதான் பாவடை நனையாம் தூக்கிட்டு ஒடுவாங்களே, கடைசியா "குஷ்புபிரபு" ஆட்டொகிராப் வேற. நம்ம முருகனுக்கு ஜுரம் ஏறிக்கிட்டே இருந்தது.

ஏய் வாடா மெட்ராஸ் போய்பாக்கலாம்? வாரம் முழுக்க நச்சரிப்பு தாங்கமுடியல. ஏய் செமஸ்டர் வருது பிறகு போகலாம்ன்னு அவன சரிக்கட்ட உம்பாடு எம்பாடு ஆகிப்போச்சு. ஒருவழியா செமஸ்டர் முடிஞ்சு திரும்பவும் இவன் நச்சரிப்பு தாங்கமுடியல. சரி லீவுக்கு ஊருக்கு போக முன்ன மெட்ராஸ் போயிட்டு போகலாம்ன்னு ஆச்சி.பிரஸ் வள்ளியப்பன், நந்தா, வேலு, முருகன் எல்லாரும் வெள்ளி மெட்ராஸ் போறதா முடிவு. தங்கறது வள்ளியப்பன் ஃப்ரண்ட் துரையோட அஷோக் நகர் கெஸ்ட் ஹவுஸ். நாங்க யாரும் அதுவரைக்கும் மெட்ராஸ் போனதில்ல அதுதான் முதல்பயணம்.

11மணிக்கா பர்ரிஸ்ல இறங்கி முத்திரசந்துல, ஏங்க அஷோக் நகர் இங்கயிருந்த நடந்து போகலாம்ன்னு? கேட்க்க அவரு ஊருக்கு புதுசா? அதோ அந்தாண்ட நிக்கிற 70 சிரிஸ்ல ஏறிப்போ. அஷோக் பில்லர் போகுமாங்க? போகும் போகும்.

பில்லர் வந்து இறங்கினா நல்ல இருட்டு ஆள் நடமாட்டமே இல்ல. டேய் இங்கதாண்டா அவின்யு ரோடு சிக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் அதோ அந்த 64ஆம் நம்பர் வீடுதான்டா. ஏங்க தங்கராசு வீடுங்களா? டேய் துரை வீடுடா டேய் துரை அப்பாதான் தங்கராசு. அப்படி யாரும் இல்லங்க ராத்திரி தொந்தரவு பண்ணக்கடுப்பு தெரிஞ்சிது அவரு சொன்ன பதிலுல.அவின்யு அவின்யுவா சுத்தி சூரியன் தியேட்டர் எதிர் சிக்னல் ரோட்ல நின்னு சினிமாவுக்கு போலமான்னு பார்த்தா மணி 1ஆகி போச்சு. ஆள்அரவுமில்லாத ரோட்ல லைட்டு வெளிச்சம். சரி அட்ரஸ் கேக்கலாமுன்னு பார்த்தா போலிஸ் ஜீப்.

ஏய் இங்க என்னடா கூட்டம்? இல்ல சார் ஊர்லிருந்து வரோம் அட்ரஸ் தேடுறோம். சரி சரி இங்கல்லாம் நிக்க கூடாது போங்க போங்க. திரும்பவும் அங்கயே போய்பாக்கலாம்டா? நந்தா சொன்னா சரிதான்னுட்டு திரும்பவும் அந்த அவின்யு போன அந்த 64ஆம் நம்பர் வீடுகிட்ட ஒருத்தர் நின்னு நாங்க வர்ர வழிய பாத்தபடி இருந்தார்.

ஏன் தம்பிகளா லேட்டு? சமைச்சு வச்சிருக்கேன் வாங்க சாப்பிடலாம். யோவ் இரண்டு மணி நேரத்திக்கு முன்னால இந்த சீழ்வீட்ல கேட்டதுக்கு அப்படில்லாம் யாரும் இங்கல்ல தொரத்துனா ஒருத்தன் என்ன ஊருடா இது? மேல் வீட்ல யாரு இருக்கான்னு தெரியாம? கடுப்பானான் வள்ளியப்பன்.

மறுநாள் காலையில முருகனுக்கு கடும் ஜுரம் குஷ்பு ஜுரம் இல்லிங்க நிஜ ஜுரம். சரி விடுடா அப்புறம் பார்த்துக்கலாம் சொன்ன கேக்க மாட்டேன்கிறான். அடாது மழை பெய்தாலும் விடாது குஷ்பு படம் பார்க்கிறவனாச்சே ஆள் சொல் பேச்சு கேக்கறமாதிரில்ல.இரண்டு கொரோசின் மாத்திரைய முழிங்கிட்டு பில்லர் ஸ்டாப்ல பஸ்க்கு வெயிடிங்.

அடிச்சி புடிச்சி சைதாப்பேட்டை வந்த மந்தவெளி பஸ் ஏறுனா நம்ம முருகன் செம்ம டயடு நிக்க முடியா கம்பி புடிச்சி சாஞ்சி நிக்கிறான் அடுத்த ஸ்டாபுல ஏறுன அட்ட ஃபிகர் மேல் தெரியாம இடிக்க அது சுல்லுன்னு எரிச்சி விழ பையன் ரொம்ப நொந்துட்டான்.

ஒருவழியா மந்தவெளி வந்து சீப்ரொஸ் அப்பார்மென்ட் தேடியலஞ்சோம் ஏன்னா அங்கதானே கட்டுடைத்தலைவி இருக்காங்க. இங்க வந்து கேட்டா அவங்க மாத்திட்டு போயிட்டாங்க! ஸ்ஸப்பா.. அவங்க எப்பவும் ஆட்டோ வலதான் போவங்க அந்த ஆட்டோ ஸ்ட்ண்டல கேட்டுப்பாருக்ங்க. அண்ணே குஷ்பு இப்போ எங்க இருக்காங்க தெரியுமா? அவங்க போட் க்ளப் ஏரியாவுக்கு மாறிட்டாங்க 80பது கொடுங்க போகலாம் இல்லண்ணே வேணாம்.

டேய் உன்னால நடக்க முடியுமா? பார்த்தா ரொம்ப டயடாயிருக்க? வேணாம்டா அப்புறம் ஒரு நாள் பாத்துக்கலாம்.
இல்லடா இவ்வளவு தூரம் வந்துட்டோ ம். போய் பாத்துடலாம்டா?
டேய் நீ சொன்னா கேக்க மாட்ட ம்!

அப்பா ஒருவழியா போட் க்ளப் வந்துட்டோ ம் அங்கப்பாரு ஃபோட் இதுல அவங்க வீட எங்க கண்டுபிடிக்கிறது.
ஹாய பாப்பா குஷ்பு வீடு எங்க இருக்கு?
குஷ்பு ஆன்டி வீடா? அதோ அந்த ரைட்டு டேன் இரண்டாவது வீடு.
முருகனுக்கு செம்ம குஷி கிட்டதட்ட ஒடினான்.

யாரு?
குஷ்புவ பாக்கனும்.
அவங்க இல்ல வெளி ஊர் ஷுட்டிங் போயிருக்காங்க
இல்லங்க ரொம்ப தூரத்துலிருந்து வரோம்.
இல்லப்பா அவங்க ஜாதி மல்லி ஷுட்டிங் ஊட்டி போயிருக்காங்க
கார் நிக்குது?
ஊட்டிக்கு கார்லயா போவாங்க? இருங்க
உள்ள போயி ஃபோன்ல பேசினான் வாட்ச்மேன் பேசின கொஞ்ச நேரத்தல ஒரு அம்மா இரண்டு குஷ்பு ஃபோட்டோ கையெழுதோட
கொண்டுவந்து கொடுத்துட்டு போனாஙக.

வாட்ச்மேன் வந்து எங்ககிட்ட அந்த ஃபோட்டோ கொடுத்துட்டு அங்க வர ஒரு வாரம் ஆகும்.

சரி இங்க ஃபோட்டோ வது எடுத்துக்கிறோம்
இல்லங்க அதெல்லாம் முடியாது
நீஙகளும் நில்லுங்க பிளிஸ்..
சரி சரி சிக்கிரம்.
ஏய் அவங்க கார் நம்பர் ஃபெளேட் தெரியரமாதிரி எடு?
ஏய் நீ வரலயா? போடா இவனோட எல்லாம் ஃபோட்டோ எடுத்துக்க முடியாது
ரொம்ப தங்ஸ்ங்க உங்க பேரு
சுரேஷ்
எவ்வளவு நாளா வாட்ச்மேனா இருக்கிங்க?
இபபதான்
...
...
சரி அப்போ நாங்க வரோம்
இருங்க
இன்னும் இரண்டு ஃபோட்டோ கொடுத்தான்

சரி வரோம் சுரேஷ்
ம் மறக்காம் இப்ப எடுத்த ஃபோட்டோ எனக்கு அனுப்புங்க சரியா

ம் கண்டிப்பா.

Friday, May 19, 2006

வயசாளிகளும், சம்சாரிகளும்...

கடந்த சில வாரங்களா என் அறையில் வயசாளிகளும், சம்சாரிகளும் நாயக்கர்களும் நடமாடி கொண்டிருந்தார்கள். ஆமாங்க ஒவ்வொரு இரவும் கி.ராஜநாராயணனின் 'கோபல்ல கிராமம்' நாவலை படிக்கும்போது இப்படிதாங்க உணர்ந்தேன்.

துனை இயக்குனர் நண்பரிடம் முதல் மரியாதை படம் பற்றி பேசி கொண்டிருக்கும்போது அந்த கட்டை விரல் சீன் இந்த 'கோபல்ல கிராமம்' த்திலிருந்துதான் சுட்டது (உணமையா?) அப்படின்னாரு நாவல் இருந்தா கொடுங்களேன் வாங்கி படிக்கி ஆரம்பித்ததுதான். கரிசல் நிலத்தின் ஆடு மாடு குருவி ஜனங்க இப்படி எலலாத்தையும் அறிமுகப்படுத்தற அருமையான folklore நாவல்.

மற்ற நாவல்கள் போல இல்லாம இஷ்டப்பட்டபோது சரித்திரம் பேசி ஒரு இடத்தில் விட்ட கதை வேறு எங்கையோ தொடர்கிறது.நெருக்கடியான அளவுக்கு கதை மாந்தர்களிருந்தாலும் இவர்தான் கதை நாயகன் என்று சொல்ல முடியவில்லை.

தெலுங்கைத் தாய்மொழியாக கொண்டு துலுக்கர்கள்( அப்படித்தான் ஆசிரியர் குறிப்பிடுகிறார்) தொந்தரவினால் தென்னிந்தியாவிற்கு வந்து இந்தக் கலாச்சாரத்தில் ஒன்றுபட்டு வாழும் ஒரு தனிப்பட்ட இனத்தினரின் வசீகரமான கதை. கிடைத்தால் படித்து பாருஙகள்.

Thursday, May 18, 2006

கவிதைக் கலை

ஆர்க்கிபால்ட் மேக்லீஷ் (அமெரிக்கா)
தமிழில் - பிரம்மராஜன்

நவீன அமெரிக்கக் கவிஞர். கவிதைக்கான புலிட்ஸர் விருதினை 1932-ஆம் ஆண்டு பெற்ற ஆர்க்கிபால்ட் மேக்லீஷின் கவிதைகளை வகைமைப்படுத்துவது எளிதல்ல. உணர்ச்சி நிறைந்த கவிதைகளையும், பொது வாழ்வுக்கான அதிகமாய் எளிமைப்படுத்தப்பட்ட கவிதைகளையும், சிக்கலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார். கவிதைக் கலை என்கிற கவிதை அதிகம் பிரபலமானது மட்டுமின்றி அதிகம் மேற்கோள் காட்டப்படுவதும் கூட.

ஒரு கவிதையிருக்க வேண்டும்
உணர முடிவதாய்
உருண்டு திரண்ட பழம் போல மெளனமாய்

பேச்சற்று
புராதனப் பதக்கங்கள் கட்டை விரலுக்குத் தட்டுப்படுவது போல்

பாசி வளர்ந்து படிந்த
கைப்பகுதிகளால் தேய்ந்த ஜன்னல் விளிம்புகளைப்
போல மெளனமாய்

ஒரு கவிதை வார்த்தையற்றிருக்க வேண்டும்
பறவைகளின் பறத்தல் போல

நிலா உயர்வதைப் போல்
காலத்தினுள் கவிதை -யக்கமில்லாதிருக்க வேண்டும்

-ரவு பின்னலிட்ட மரங்களைக் குறுங்கிளை அடுத்த குறுங்கிளையாக நிலா
விடுவிப்பது போல,

பனிக்காலத்து -லைகளின் பின்புறமிருந்து நிலா
ஞாபகம் ஞாபகமாக மனதை விடுவிப்பது போல

ஒரு கவிதை காலத்தினுள் சலனமில்லாதிருக்க வேண்டும்
நிலா உயர்வது போல்

ஒரு கவிதை சமானமாய் -ருக்க வேண்டும்
நிஜத்திற்கு -ணையாய் அல்ல

எல்லாத் துயரத்துக்கும்
ஒரு வெற்று வாசலைப் போல
மேப்பிள் மரயிலையைப் போல

காதலுக்கு
தலைசாயும் புற்கள் மற்றும்
கடலுக்கு மேலாக -ரண்டு வெளிச்சங்களைப் போல

ஒரு கவிதை அர்த்தம் தரக்கூடாது
கவிதையாகயிருக்க வேண்டும்

Wednesday, May 17, 2006

once i saw a rainbow




don't ask me when
don't remind me of then

i don't know
but,
once i saw a rainbow

Monday, May 15, 2006

சைபர் உறவுகள், கான மழையடி நீயனக்கு


மீயான்மர், யங்கூன் வீதியில் ஒரு விடுதியில், நான், அவன், எங்களோடு வந்திருந்த ஹொலண்ட்'காரன் கைகளில் பியர் பாட்டலோடு உணவுக்காக காத்திருந்த போதுதான் அந்த மூனு பெண்களும் வந்தார்கள்.

வந்தவர்கள் நேராக அறையின் நடு மேடையில் ஏறி ஒரு பெண் மைக் பிடிக்க மற்ற இருவரும் டரம்ஸ், கீபோர்ட்க்கு பின்னே இருந்த நாற்காலியில் அமர்த்தார்கள்.மைக் பிடித்து பாட ஆரம்பித்த அந்த பெண்னிடம் நிறையவே சீனப்பெண் சாயல். பாடிக்கொண்டிருந்த ஆங்கில பாடலுக்கு அப்புறம் அவள் கவனம் எல்லாம் எங்களோடு வந்த ஹொலண்ட்'காரன் மேல்தான் இந்த ஐரோப்பிய மோகம் கிழக்கு ஆசிய நாடுகளுக்கே வியாதி போல
இனி இவன் கிளம்புவது கடினம்தான்.

சரி இவன் தான் அப்படின்னு அவன பார்த்தால், அவன் நாற்காலியில் அமர்ந்திருந்த பெண்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டிருந்தான்.டேய் என்னடா இது. ஆமாம்டா சொல்லிருக்கிறேன்ல்ல ச்ட்ல(chat) பர்மா பாடகின்னு அவதான்டா இவ. நிஜமா? அப்பதான் அவளை உற்று கவனித்தேன் கறுப்பு நிற நீளமான பாவடை சிவப்பு நிற மேற்சட்டை நீளமான கருமையான கூந்தல் தல குளிச்சி இருப்பா போல அப்படியே விட்டிருந்தா காதோரமா இருந்த செம்பருத்தி பூ, பெரிய கண்கள், கூர்மையான நாசி குவிந்த சிறிய உதடுகள், ஏய்!! ரொம்ப அழகா இருக்காடா.அதுசரி ஏன்? உன்னை கண்டுக்கிட்ட மாதிரி தெரியல? ஏன் ஃபோட்டோ எதுவும் தரவில்லையா? ம் தந்தேன் உன்னோடத, பார் அப்ப அப்ப உன்ன திரும்பி பாக்குறா பாரு. எனக்கு எப்பவும் எல்லோரும் என்னையே கவனிக்கிறதா ஒரு இது இருக்குறதா சொல்லி குரங்கக்கூட எல்லாரும் இப்ப்டித்தான்.. ன்னு உதாரணம் சொல்லற இவனா இப்ப்டின்னு குறுகுறுன்னு அவளை பார்த்தால் ஆமாம் பார்க்கிறாள் \o/ மெலிதாக
ஆ(க)ர்வம் கூட அவனை திரும்பிபார்த்து என்னது என்னோட ஃபோடோ தந்தியா? ஆமா, ஃபோட்டோ கொடுத்த மறுநாளிலிருந்து அவள் பேசுவதே இல்லை /o\ டேய் இதல்லாம் அதிகம்டா. இல்லடா நிஜமா அவளை கட் பண்ணதாண்டா.. சொல்லிட்டு நக்கலா சிரிச்ச பிறகுதான் அவன் அளக்குறான் தெரிஞ்சது. டேய் டேய் ரொம்ப அளக்காத மூடு சரியா.

இதற்கு இடையில் அவள் பாட வந்தாள் பர்மீஸ் பாடல் புரியவில்லையே தவிர குரல் இனிமையாகவே இருந்தது அதைவிட இடது ஆள்காட்டி விரலாலும் நடு விரலாலும் கண்ணுக்கு அருகே முடி விழவிழ தள்ளிவிட்டுக்கிட்டே பாடுறது ரொம்ப அழகு. நல்ல உயரம், மெதுவான அசைவுகளுடன் கண்கள் மூடி இதமான இசை

புல்வெளியில் எப்போதும் இருக்கும் அமைதி
மழைக்குமுன் எப்போதும் இருக்கும் வாசனை
...
என் புன்னகையில் எப்போதும் இருக்கும் நீ

அவங்க கடைய கட்டுறவரைக்கும் ரசிச்சுகிட்டிருந்தோம் கடைசியா பில்லுக்கு மிச்ச சில்லரை எடுத்துட்டு வந்த சிப்பந்தி சினனதா ஒரு கடுதாசி கொடுத்துட்டு போனான் அதுல "வருத்தம் தெரிவிப்பிர்கள் என்று எதிர்பார்தேன்" எழுதியிருந்தது. என்னடா இது? அதற்கு அவன் அதான்
சொன்னேல்ல அவதான் கொடுத்துட்டுப் போறா. என்னடா என்ன விசயம் சொல்லு? அந்த பொண்ணுதான இவ? ச்ட்ல என்ன பேசித்தொலச்ச சொல்லுடா? ஏய் ரொம்ப அலட்டிக்காத வா நாளைக்கு சிக்கிரம் ஃகளையன்ட் பார்க்க போகனும். அவசரமா அவன் பேச்ச மாத்தறத பார்த்தா பையன் ஏதோ விளையாடியிருக்கான் தெரியுது.மறுநாள் காலை வண்டில ஏறுகிறவரைக்கும் உம்ம்ம் தான். தெரியம் அவன் இதபத்தி சொல்லப்போறதுல்லன்னு.

திடிரன மெதுவாக பயணிக்க தொடங்கியது வாகனம் முன்சீட்டிலிருந்து பின்புறமாக திரும்பி எங்களிடம் சொன்னார் இதுதான் ஆங் ஸன் சூகி (Aung San Suu Kyi) யை வீட்டுக்காவலில் வைத்திருக்கும் இடம். யாரு அவங்க? ஏன் வீட்டுக்காவல்? இது அவன்.பின்புறமாக திரும்பி பேசுவது அவருக்கு ஒருவித இடைஞ்சலை தந்திருக்க வேண்டும் திரும்பி சாலையை பார்த்தவாரு சாய்ந்து அமர்ந்து மெதுவாக சொன்னார் அவங்க அரசியல் கைதி இந்நாட்டின் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவி ஆன இங்க நட்ப்பது ராணுவ ஆட்சி. மிண்டும் சனநாயகத்துக்கு போராடுகிற இவங்களை வீட்டுக்காவல் வைத்திருக்கு ரானுவம். இவங்கதானே அமைதிக்கான நோபல் பரிசு வாங்கினவங்க? ஆமா. ஏன் சர்வதேச நாடுகள்
கண்டனம் செய்வதில்லையா? இதுவரை சாலை ஒரமாக வளந்திருந்த செடிகள் ஊடே சலனமாக தெரிந்த அந்த வீடு வாகனம் அந்த சாலை திருப்பதில் திருப்பியதும் தெளிவாக தெரிந்ததில் உரையாடல் அறுந்தது. வீட்டை சுற்றி குளம், தெளிவான நீர் பெரும்பாலும் மரத்திலே ஆன நல்ல விசாலமான வீடு. மரச்சன்னலின் திரைச்சீலைகளின் ஊடே அமைதியாக வீசி கொண்டுயிருந்த காற்றில் ஏனோ பயம் கலந்திருந்தது.

ஒரு மழைக்காட்டில்...


வார விடுமுறையோடு பொது விடுமுறையும் சேர்ந்து வந்தபோது நானும் நண்பர்களும்,எங்காவது வெளியே சுற்றிவர முடிவுசெய்தோம். எறக்குறைய எல்லா தீவுகளுக்கும் முன்னமே சென்றுவிட்டதால், இந்தமுறை கொஞ்சம் வீரதிரமாக காடுமலை ஏறலாம் என்று யோசித்து "தாமன் நெகரா"(Taman Negara) என்று முடிவுசெய்தோம்.

"தாமன் நெகரா". உலகில் உள்ள மிகப்பழமையான மழைகாடுகளில் ஒன்று(சுமார் 130 மீல்லியன் ஆண்டுகள் பழமையானதாம், அமேசான், காங்கோ இவைகளைவிட பழமையானது என்று சொல்கிறார்கள்). மலேசியாவில் பாஹாங் மாநிலத்தில் பெரும்பகுதியும்,அருகிலுள்ள இருமாநிலங்களில் சில பகுதிகளும் சேர்த்து ஏறக்குரைய 4343 சதுர கிலொமீட்டர் உள்ளடங்கிய காட்டுப்பகுதி.

"புறப்பாடு".பத்து நண்பர்கள் கொண்ட எங்கள் குழு, இந்தியத்துனைக்கன்டத்தின் பல்வேறு மாநிலத்திலிருந்து வந்து மலேசியாவில் கணினித்துறையில் வேலைச்செய்பவர்கள். தேசிகன் -தொப்பிகளின்மேல் திராக்காதல் கொண்ட எங்களின் எல்லா மொழிகளிலும் பேசக்கூடிய குழுத்தலைவன். பிரஜேஷ் - ஆரம்பத்திலிருந்தே மிகுந்தார்வத்துடன் எல்லா முன்னேற்பாடுகளும் செய்தவன்,மிகப்பெரிய விடயங்களையும் மிகச்சாதாரணமாக சொல்லுபவன். கௌரி - எளிதில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவன், ஆண்டு அனுபிவத்த அனுபவஸ்த்தனைப்போல பேசுபவன். சுஷில்,பிந்தியா - புதிதாய் திருமணமான இளம் ஜோடி, எந்தவிதமான வித்தியாசம் பாராட்டாமல் எங்களோடு கலகலப்பாக பயணித்தார்கள் (மற்றும் அவர்களுக்கே உரிய ..விஷயங்களோடும்). ரஞ்சித் - திருமணமான கலகலப்பான பேர்விழி, நிறைய நகைச்சுவை துணுக்கூகளோடு கூட்டதையே கலகலப்பாக்கிகொண்டு வந்தார். சிவா - பார்பதற்கு முரடாக பழகுவதற்கு இனிமையானவன். வினாயக் - சிங்கபூரிலிருந்து வந்து எங்களோடு கலந்துகொண்ட சிவாவின் நண்பன் மற்றும் நான்."முதல் பகல்". காலை அனைவரும் கோலாலம்பூர் "ஹோடெல் மலயா" முன் கூடினோம். இங்கிருந்துதான் எங்கள் பேருந்து புறப்படுவதாக ஏற்ப்பாடு. இந்தியர்களுக்கே உரித்தான் வழக்கதில், பேருந்து புறப்படும்போது நிறுத்த சொல்லிவிட்டு காலைவுணவுக்காக அலைந்தோம் அன்று விடுமுறைதினம் ஆதலால் கடைகள் எல்லாம் முடியிருந்தது.பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு ஒருக்கடை கண்டுப்பிடுத்து, தமாதமானதால் கிடைத்த ரொட்டியை "பொங்கூஷ்" (பார்சல்) செய்துக்கொண்டு புறப்பட்டோம்.எங்களோடு இந்தியாவிலிருந்து வந்து இங்கு வேலைச்செய்யும் மற்றோருக்குழு, சில சினர்கள், மற்றும் பிறத்தேசத்தினரும் பேருந்தில் இருந்தனர். பயனநேரத்தை கழிப்பதற்காக "தம்ஷ்ரத்ஸ்" விளையாட அரம்பித்தோம்(என்னைத்தவிர அனைவருக்கும் இந்தி தெரியும் ஆதலால் பொதுவாக இந்தியிலே இருந்தது எங்கள் உரையாடல்). என்முறை வந்தது, காதில் ஒரு இந்திப்படத்தின் பெயர் சொல்லப்பட்டது, என்க்குத்தெரிந்த அரைக்குறை இந்தியைவைத்துக்கொண்டு அபினயம்பிடிக்கத்தெரியாமல் முழித்தேன், என்முழிப்பைபார்த்து எதோ புரிந்து கொண்டு பிரஜேஷ் வரிசையாக படங்களின் பெயர் சொல்ல நல்லவேளையாக அதில் ஒன்று என் காதில் சொன்னப்பெயர்.நிம்மதியாக வந்து இருக்கையில் அமர்தேன். இப்படியாக சிரிப்பூம், சத்தமாயிருந்த எங்கள் விளையாட்டு ஓட்டுனருக்கு எரிச்சல் மூட்டியதால் அனைவரும் தூங்குவதற்கு நிற்பந்திக்கப்பட்டோம். சுமார் 4மணிநேர பயணத்துக்குப்பிறகு "கோலா டெம்லீங்" படகுத்துறைக்கு வந்துசேர்ந்தோம். இங்கிருந்துதான் படகு எடுத்துகொண்டு தாமன் நெகரா செல்லவேண்டும். நாங்கள் ஒருமரப்படகை வாடகைக்கு அமர்த்திகொண்டோ ம், தகரவொடுகள் வேயப்பட்டு சற்று நிளமாக இருபதுபேர்களுக்குமேல் அமரக்கூடியதால் எங்களோடுப்பேருந்தில் பயணம்ச்செய்த மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டோ ம். அப்படகின் பின்புறமிருந்த சிலாயிரம் குதிரைச்சக்திக்கொண்ட யமாகா மோட்டார் இயக்கம் பெற்றதும் அந்தக்காட்டாறின் நீரோட்டத்தை எதிர்த்து பயணப்பட்டோம். சில சிறுக்கட்டடங்களை கடந்தப்பிறகு நீரோட்டத்தின் இருபுறமும் பச்சைப்பசேலென்று அடர்த்தியான மரங்கள், பறந்தப்படியே இரைத்தேடும் சிறியப்பறவைகள், ஆற்றைக்கடக்கும் மாடுகள்,கரையோரத்தில் இடுக்கியக்கண்களோடு கிராமத்து மனிதர்கள்.இந்த அழகியக்காட்சியை உள்வாங்கியப்படியேருந்த எங்கள் கனத்தமௌனத்தை திடிரண்டு
ஷமிகின் குரல்............

Sunday, May 07, 2006

ஸ்ரீலஸ்ரீ வலபதிவுவாசி சைபரானந்தா பேட்டி

கல்கொத்தாவில் இருந்து சென்னை வந்து புதிதாக வலைப்பதிவு ஆசிரமம் அமைக்கவிருக்கும் ஸ்ரீலஸ்ரீ வலபதிவுவாசி சைபரானந்தாவை தீடிர் ரிப்போட்டர் பட்டணத்து ராசா கண்ட கேட்ட பேட்டி( செவ்வின்னு சொல்ராங்கலே இதைத்தானோ?).

வலைபதிவு, அரசியல், பெண்ணீயம் ஆசிரம செயல்ப்பாடுகள் இப்படி பலதரபட்ட கேள்விகளுக்கு கொஞ்சம் கூட முகம் கோனாமல் ( இப்பவே பார்கக சகிக்கீல) பதிலளித்த சைபரானந்தாவின் பேட்டி.

ப.ரா : நீங்க சென்னை தேர்வு செய்த நோக்கம் ?

ஸ்ரீலஸ்ரீ : கல்கொத்தாவில் முதல் அமைச்சர் 80 ஆயரம், சோனியா 7 கோடின்னு சொத்து கனக்கு காட்ட, தமிழகத்தில மட்டும் ஆளுங்கட்சி, எதிரணி இரண்டுமே 20 கோடிக்கு மேல. இங்க ரீஸோஸ் ( resource pool) அதிகம் சாமி அதான்.

ப.ரா : அது அரசியல் அதுக்கும் ஆசிரமத்துக்கும் என் சம்பந்தம்?

ஸ்ரீலஸ்ரீ : ம்.. எல்லா இடத்திலும் நீக்கமற நிறைஞ்சு இருக்கிறது அரசியல் தாம்.

ப.ரா : அது என்ன வலைபதிவு ஆசிரமம் ? (மாட்டிக்கிட்டா ஈசியா எஸ்கேப்)

ஸ்ரீலஸ்ரீ : ம் எங்கள் செயல்பாடுகளை பாருங்கள் அதன் அவசியம் புரியும்.

ப.ரா : கடவுள் மறுப்பு ஆட்களிடம் திருவிளையாடல் தருமி மாதிரி நிறைய கேள்வி வருமே?

ஸ்ரீலஸ்ரீ : நாங்க கேட்ட்பதைதான் நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால நாங்கள் சொல்லுவதை சொல்ல மறுக்கிறீர்கள் அப்படின்னு அதாவது குன்சாவா சொல்ல வேண்டியதுதான்.

ப.ரா : திரவிட ராஸ்கள் நிறைய இருகாங்களே?

ஸ்ரீலஸ்ரீ : டிவி பார்க்கும் பெரும்பான்மை மக்களுக்கு கலர் டிவி, இன்டர்நெட் பார்க்கும் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லையே அப்படி எதையாவது சொல்லி கூட்டம் சேக்க வேண்டியது தான்.

ப.ரா : ம் தெளிவாத்தாம் இருக்கிங்க சாமி. அது சரி பெண்ணீயம்?

ஸ்ரீலஸ்ரீ : மற்ற துறைகளை விட ஆன்மிகம் பெண்களுக்கு அதிக இடம் கொடுத்துள்ளது அதிக எண்ணிக்கை உள்ள பெண் சாமியார்களே அதற்கு சாட்சி. இங்கே கூட ஒரு அம்மா ஒரு மடம் ( மாடமா) வச்சு இருக்காங்களே ( அவங்க வைர கீரிடம் பார்த்து தான் நானே வலைபதிவு ஆசிரமம் தொடங்குறேன்.)

ப.ரா : சரி இப்போ ஆசிரம பணிகள் என்ன நடக்கின்றன?

ஸ்ரீலஸ்ரீ : பாசீச, மார்கிசிய, முன் பின் நவினத்துவ அப்படிங்கற வார்ததைகளுக்கு ஒரு டீம்மும், குன்சா, கவிஜ, அறிக்கை ங்கற வார்ததைகளுக்கு ஒரு டீம்மும் அமைச்சு ரிகர்சல் பார்த்துகிட்டு இருக்கோம். அப்புறம் இந்த "முன்முடிவு" வார்ததை மட்டும் நான் நான் மட்டுமே.

ப.ரா : உங்கள மாதிரி அறிவில் சிறந்த ஞானிகள் இப்படி பண்ணலாமா?

ஸ்ரீலஸ்ரீ : தம்பி இப்ப கேட்டிங்ளே ஒரு கேள்வி அத எங்க ஊர்ல தலையுல செருப்பு தூக்கி வக்கிறதுன்னு சொல்லுவாங்க. சரி நான் வரேன் ஆசிரம பணிகள் நிறைய கிடக்குது.

ப.ரா : வாங்க உங்க பணி சிரக்கட்டும், நன்றிகள்.

Saturday, May 06, 2006

மீண்டும் கவிஜ

பார்ரா என்னத்தான் சகவலபதிவாளர்கள் விமர்சனம் செய்தாலும் சிலருக்கு அடங்காம கவிஜ பொங்கி பொங்கி வருது அடங்க கொஞ்ச நாள் ஆகும் பொருத்துக்குங்க மக்களே.

சுவற்றின் நெற்றியில்
ஆணி அடிக்கப்பட்டது
இயேசுவின் படத்தை
மாட்டுவதற்காக.

(ராசா எங்கயோ கேட்ட மாதிரி இருக்கேடா..)
அப்புறம் இந்த கவிஜ க்கும் நட்சத்திர பதிவாளர் சரி சரி சூப்பர் ஸ்டார் பதிவாளர் (கழக தளபதி, கொ.ப.செ எல்லாம் வந்து அடிய போட்டுடப் போறாங்க) முத்திவின் "அந்த" பதிவுக்கு எந்தவித சம்பந்தமும் இல்ல இல்ல ஏன்னா இது சுட்டது :)

Friday, May 05, 2006

மற்றுமொரு தமிழ்மீடிய பையனும் இங்கலிஷ் சாங்ஸ்சும்.

நம்ம இளவஞ்சி (நம்ம அப்படின்னு சொல்லலாம் இல்ல) தாதாவோட பீட்டர் சாங்ஸ்சும்.. பதிவ படிச்சதலிருந்து ஒரே music thirsty தான் போங்க அதாங்க இசை தாகம் இங்கலிஷ் சாங்ஸ்ல்ல அதான்.வலைபதிவுகள படிக்க ஆரம்பச்தலிருந்த நம்ம அறிவு இந்த ஏரியான்னு இல்லாம் எல்லா ஏரியாவிலும் எக்கசக்கமா :-)

என்னடா இப்படி ஆகிபோச்சே அப்படின்னு உக்காந்து யோசிச்ட்டுயிருந்தப்போ வந்தார் நம்ம நண்பர் கில்பர்ட் சர்ச்லலாம் பாடுவார் அவருக்கிட்ட என் இங்கலிஷ் சாங்ஸ் ஆர்வத்தை பற்றி சொன்னப்ப என்கிட்ட சாங்ஸ் எதுவும் இல்ல என்னோட நண்பர் கிட்ட அழைச்சிட்டு போறேன் சொன்னார்.

போனவாரம் பெஸன்ட் நகர் பீச்சு நகர்வலம் போனா அங்க நமம கில்பர்டும் (கொஞ்சம் பெருசு போல இருந்த) அவர் நண்பரும். அப்படியே பேசிகிட்டே நம்மளபற்றியும் நம்ம இங்கலிஷ் சாங்ஸ் ஆர்வத்தை பற்றியும் எடுத்தவைக்க நம்மள ஒரு பார்வ பார்துட்டு கில்பர்ட் கிட்ட வீக்கெண்ட் வாங்களேன் அப்படின்னாரு. தொடர்ந்து பேசனதுல ஸபார்க்ஸ், பைக் & பெரல் (இது எல்லாம் என்னன்னு அப்புறமா கில்பர்ட் கிட்ட தெரிச்சுகிட்டேன்) இப்பயெல்லாம் முன்னமாதிரி இல்ல அப்ப்டின்னு பொலம்பிட்டு இருந்தார் கெடுபிடி அதிகமாம்.

சனிக்கிழமை அள்ளிகிட்டு வந்துடலாமுன்னு நண்பர் விட்டுக்கு போனோம். இதுதான் புதுசா வாங்கன sony hi-fi system (மலேசியாவுல இருந்து வாங்கனதாம்) அப்படின்னு காட்டினாரு எதோ watts,power logic, surround-sound ( இங்கலிஷ் படம் முடிஞ்சி எழுத்து ஓடி முடியும்போது கடைசியா வருமே ) அப்படின்னு சொல்லிகிட்டே இருந்தாரு உட்டா மேனுவல முழுசா சொல்லுவார் போல ஸ்ப்பா..

பேசிகிட்டே பக்கதுல இருந்த self தொரந்தாரு வாவ் self fulla சீடி தான். நம்ம தாகம் தனிஞ்சுதுடா மகனே நினைச்சுகிட்டேன். ஹெய் மேன் வாட சாங் யு வாண்ட்? டக்குனு கேட்டபதான் தோனிச்சு ஐய்யோட இளவஞ்சி பதிவ பிரிண்டு போடமா வந்துடோ மேன்னு. ஆ ஆ எனி ஃபாஸ்ட் சாங் ( குத்து பாட்டு கேட்டே வளதோம்ல்ல). யு வாண்ட் ராக்?.. ம்ம் ( அப்படின்னா) ஹெவி மெட்டல்?.. ம்ம் (இதுவேறயா) சீடிய சிஸ்டத்துல போட்டதும் சவுண்டு டாப் கீயரல எகுற, கரகரன்னு குரல் டரம்ஸ், கீட்டார் ( கேட்டு தெரிஞ்சுகிட்டோ மில்ல ) ஆத்தி!! காது அந்து உருண்டு ஓடும்போல..

இருந்தாலும் சமாளிச்சிகிட்டு ( மேன்மக்கள் இசைய தெரிஞ்சிக்க வேணாம??) நாங்க எல்லாம் யாருன்னு நண்பர பார்த்தா தலைய ஆட்டி பயங்கரமா ரசிச்சிகிட்டு இருந்தாரு ( ச்ச என்னடா நம்ம ரசன ஒன்னியிம் விளங்கள) சரிப்போன்னு சோனியா அகர்வால் தனுசுக்கு சொல்லி கொடுத்த மாதிரி தலைய ஆட்டிகிட்டே நண்பர பார்த்தா ஸ்மைல் வேற :( யு லைக் இட்?? ம்ம் யா யா உடனே வால்யும் அதிகம் வேற ஆத்தா.

இபபடி ஒரு பத்து சீடி ஒன்னு ஒன்னா முழுசா ப்ளே பண்ணி முன்னுரை முடிவுரை எல்லாம் கேட்டு விட்டுக்கு வர அது ஆச்சி மணி பதிணொன்னு.
அம்மா என்னடா சாப்பாடு வேணுமா. என்னது? அம்மா நீ எதோ பேசர மாதிரி தெரியுதா ஆனா ஒரே கொய்ய்ய்ன்னு தான் கேக்குது. நாட்டமையில சரகுமார்கிட்ட கவுண்டமணி அடி வாங்கனப்ப சொல்லுவாரே அதே மாதிரிதான் மறுநாள் வரை கொய்ய்ய்ய் தான். வாங்கிட்டு வந்த சீடி அப்படியே இருக்கு, சூரியன் fmக்கூட இரண்டு நாளா கேக்கல.ஏனுங்க இளவஞ்சி தாதா இதபற்றி ஒரு வார்தை கோடிட்டுடாவது காட்டியிருக்கலாம் இல்ல என்னமோ போங்க.

Thursday, May 04, 2006

மார்க்சிய சித்தாந்தம்

முத்துவோட மார்க்சியம் பதிவு படிச்சதிலிருந்து என்னடா இதல்லாம் தெரியாமவே இருத்துட்டோ மேன்னு ஒரே வருத்தமா போச்சு சரி படிச்சுட்டா போச்சுன்னு கூகுள்'க்கினா வதவதன்னு வந்திவிழுந்த பக்கங்களில் தலை சுத்துனதுதான் மிச்சம். நன்பர் ஒருவர் கிட்ட கேட்டதுல நாலுஞ்சு பேப்பர
தந்து படின்னார் அங்க படிச்சத இங்க பதியுரேன். படிச்சுட்டு என் புரிதல் தவறா இருந்தா சொல்லிட்டு போங்க வலது, இடது நன்பர்களே மற்றும்
திராவிட ராஸ்கள்களே(செல்லமாதான்:-)). மார்க்சியம் பற்றி தெரிஞ்சிக்க கீரியா ஊக்கியாக இருந்த முத்துவுக்கு நன்றிகள் பல..
முத்துவோட பதிவும் அதன் பின்னூட்டங்களும் ரொம்ப டீப்பா(deep) இருக்குறதனால இங்க கொஞசம் அடிப்படையா சுலபமா முயற்சி
பண்ணுவோம் ஓகேவா.
இனி..(எவ்வளவு எழுத்துப்பிழை இருக்கோ அவ்வளவு "-" குத்துங்க தெரிஞ்சிக்கிறேன் :-))
தொழிலாளர்கள் தகுதி அடிப்படையிலான சித்தாந்தம்

மார்க்சிய பொருளியலின் முக்கிய கொள்கையே இந்த தொழிலாளர்கள் தகுதி அடிப்படையிலான சித்தாந்தம்தான் இதன் அடிப்படை மிகசுலுவானது
பொருள்களின் விலை மதிப்பீடு அந்த பொருளை உற்பத்தி செய்ய தொழிலாளர்களுக்கு பிடிக்கும் நேரத்தின் அடிப்படையில் அமையவேண்டும்
என்பதே.இரண்டு சட்டை தைக்கிற நேரத்தைவிட இரண்டு ஜோடி செருப்பு தைக்கிற நேரம் அதிகமுன்னா செருப்போட விலை அதிகம் இரண்டுக்கும்
தேவையான மூலப்பொருட்கள் வேறவேறவாக இருந்தாலும்.அதுக்கு அப்புறமா இதல பலமாற்றங்கள் வந்தா சொல்லுறாங்க.
இந்த சித்தாந்ததைதான் மார்க்ஸ் கேப்டலிசத்துக்கு எதிரா வச்சார்.கேப்டலிஸ்டகள் செய்ய விரும்பாத இந்த சித்தாந்ததை தூக்கி பிடிச்ச மார்கஸ் இது எல்லா வர்த்தக பொருளுக்கும்(commodities) பொருந்தும் வாதிட்டார்.கேப்டலிஸ்டகளிடம் கூலிக்கு போகும் தொழிலாளர்களையும் ஒரு (commodity)வர்த்தக பொருள்ன்னு குறிப்பிட்டு இதுவும் இந்த சித்தாந்ததுக்கு உட்பட்டதுதான் சொன்னாரு. அவரோட பானியில சொல்லனும்முன்னா "லேபர் பவர்".
தொழிலாளர்களுடைய உற்பத்தி திறனும் சேவைப்பயனுமே "லேபர் பவர்". மார்க்ஸ் இதை கேப்டலிஸ்ட் பானியிலே விவரிக்கிறார் இப்படி
சமுதாயத்துக்கு தொழிலாளிக்கு அவன் வேலை செய்ய உணவும் உடுக்க உடையும் கொடுக்க எவ்வளவு உற்பத்தி நேரம்(labour hours) தேவையோ அதைச்சார்ந்ததுதான் "லேபர் பவர்". எப்படின்னா ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் உணவு உடை கொடுக்க ஐந்த லேபர் மணி நேரம் தேவை. ஒரு லேபர் மணி நேரம் ஒரு ருபாய் அப்படின்னா ஒரு நாளைக்கு கூலி ஐந்து ருபாய்.
தொடரும்..
அது சரி.
மார்க்ஸ் இறந்து நூற்றாண்டுகளுக்கு பிறகும் அவருடைய கேப்டலிசத்துக்கு எதிரான விமர்சனமும் அதற்கு மாற்றாக அவர் வைத்த சித்தாந்தமும்
விவாதத்துக்கு உள்ளாவது ஏன்?
அவசியமான, அனுகூலமான, அவருடைய சொசியலிச சித்தாந்தம் இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் உலகளாவிய புரட்சிக்கு வித்திட்டது
உண்மைதான். ஆனா Poland, Hungary, Czechoslovakia, East Germany, Romania, Yugoslavia, Bulgaria, Albania,USSR இப்படி அந்த சிததாந்ததின் தோல்விகள் ஏன்?

வாழ்க ஜனநாயகம்


ஏழுபத்து ஆறு முறை தோல்விகள் சந்தித்து தற்போது செபாக்கத்தில கருணாநீதி எதிர்த்து போட்டியிடும் பத்மராஜன் இதுவரை முன்சிபல் தேர்தலிருந்து ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் போட்டியிட்டு இருக்கார். இவர் எதிர்த்து போட்டியிட்ட விஐபிகள் ஏ.பி.அப்துல் கலாம், கே.ஆர்.நாரயணன், பி.வி. நரசிம்ம ராவ், ஏ.பி. வாஜ்பேய்.ஜெ. ஜெயலலிதா. அதிக தோல்விகள் கண்ட வேட்பளரா limca book of records ல இடம்பிடத்துள்ள இவரோட இலக்கு கின்னஸ்தானாம். வாழ்க ஜனநாயகம்.

Wednesday, May 03, 2006

விருத்தாசலத்தில் விஜயகாந்த் தேறுவார்

தற்சமய நிலவரப்படி விருத்தாசலத்தில் விஜயகாந்த் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தேறுவார் என்றேப்படுகிறது.பாமக வேட்பாளரின் மிதான அதிருப்தி ஒரு காரணியாக இருந்தாலும் சினிமா கவர்ச்சி மககளிடம் இன்னும் செல்லும் என்பதே கூற்று.எனினும் கலர்டிவி திட்டம் பெண்களின் வாக்கு விஜயகாந்த் எதிராகதான் உள்ளன. ஆண்களுக்கு அத்திட்டம் அமலாக்கபடும்போது நிகழும் சார்ப்பு பற்றிய கேள்வி எழுவதால் கனிசமான வாக்குகள் விஜயகாந்துக்கு விழும்.பொதுவாக அதிமுக திமுக பாமக ஆட்சி காலங்களில் பெரிதாக குறிப்பிடும்படியாக எந்த ஒரு திட்டமும் நிகழ்த்தபடவில்லை ஆகவே செயல்பாடுகள் முலம் வாக்குகளை கூட்ட இக்கட்சிகள் தவிறிவிட்டன என்றுதோனுகிறது.சமிபமாக பெய்த பெரும்மழையில் விழுந்த பாலம் அது சீர் அமைக்க, மாற்றுபாலத்துக்கான தாமதங்கள் இப்படி அதிருப்திகள் இருக்கும்பொது திடிரன தொகுதி நட்சத்திர அந்தஸ்து தந்த விஜயகாந்தின் மிதான கவர்ச்சி செல்லும்.அவர் ஜெயித்த பிறகு பெருசா அவரு செய்லலனாலும் அவரு அடிக்கப்போற சில ஸ்டண்டுகளும் அதன் ஊடக கவரப்பும் சில நல்லதுகள விருதாசலத்தில் நடக்கலாம்.. நடக்கட்டும்.

கவிதை எதிர்ப்பு.

சமிபகாலமாக நட்சித்திர பதிவாளர்கள் பதிவுகளில் ஆரம்ப பதிவாளர்களின் கவிஜ புனையும் பதிவுகள் குறித்த பாசிச தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இவர்களுடன் முன்னாள நட்சித்திரங்களும், சிலகாலமாகவே பதிவுகளின் முலம் இலக்கிய பணியாற்றிவரும் (அவ்வாறு நினைத்துகொள்ளும்) அறிவுஜிவி பதிவாளர்களும் அடக்கம். இவர்களின் இந்த தலைகேரிய வெறி அப்ப பதிவுகளின் பின்னுட்டங்களில் விரவிக்கிடக்கின்றன.அவர்களுக்கு பலவினமான எதிர்பையாவது பதிவு செய்யவே இந்த பதிவு.

இந்த முலையிலே கிள்ளி எறியும் முயற்சியை பொருட்படுத்தாமல் கவிஜ புனைபவர்கள அயராது வார்தைகளை மடக்கி மடக்கி முடிந்தால் எழுத்துகளையும் பிரித்து பிரித்து போட்டு புனைவதை நிறுத்தாமல் தொடருமாறு கேட்டுகொள்கிறேன்(அப்படி எழுதுனத நூறு தடவை படிக்கிபோறது நாம மட்டும் தானே).

Monday, May 01, 2006

No Man's Land

பொதுவா போர் படங்களை இருவகைப்படுத்துலாம், முதலாவது சரித்திர நாயகர்களின் நாயகச்செயல்களை பறைச்சாற்றும் படங்கள். இரண்டாவது
பயங்கரமான, விகாரமான , மனிதாபிமானமற்ற போரின் மறுமக்கத்தை காட்டுற படங்கள்.

உலகதின் வேறு மூலையில் நமக்கு பலருக்கு அறிமுகம் இல்லாத "போஸ்னியா"தான் no mans land. மிக மோசமான உள்நாட்டுப் போர்
இருக்கும் போஸ்னியாதான் கதைக்களம்.போஸ்னியன் இயக்குனர் டனிஸ் டனொவிக்( Danis Tanovic) நேர்மையாக மறக்கமுடியாத படமா இயக்கியிருக்கிறார்.

மிக அடர்தியான பனிமூட்டத்துக்கிடையே தொடங்கும் படம் போஸ்னியாக்கும் யுக்கஸ்லொவியாக்கும் இடையே இருக்கும் குழப்ப நிலையின் சரியான அவதானிப்பு.போஸ்னியனின் ரானுவத்தின் ஒரு சிறுப் பிரிவு முன்னேறிச் செல்லும் போது பனிமூட்டத்தின்யிடையே வழிமாறி செர்ப்ஸ் விரர்களால் சுழ்ந்துகொள்ளபடுகிறார்கள். ஒரே ஒரு போஸ்னிய விரன் மட்டும் உயிர்தப்பித்து பதுங்கு குழியில் (trench) தஞ்சம் அடைகிறான். தறகாலிகமா பாதுக்காப்பானதா இருந்தாலும் திரும்பவும் தன் படைப்பிரிவு இருக்கும் இடத்த அடைய முடியாம தவிக்கிறான். சிறுது நேரத்திலே இரண்டு செர்ப்ஸ் விரர்கள் அந்த பதுங்கு குழிக்கு வந்து சேருகிறார்கள் அதில ஒரு விரனை கொன்றுவிடுகிற போஸ்னிய விரன் மிச்சம் இருக்கிற செர்ப்ஸ் விரனோடு முனாவதா ஒரு விரனையும் அந்த பதுங்கு குழில இருக்கான். அவனோட அபாயகரமான நிலையும் அதனாலும் முவருமே அழியப்போறத அறிந்து உறைந்துப் போகிறார்கள். அப்பொது அங்க வருகிற UNம் ஊடகங்களும் அந்த சுழ்நிலையின் திவிரத்த குறைக்காம அதிகப்படுத்துவது.

படத்தின் முக்கிய கூறுகளா நான் நினைக்கிறது படத்தின் பெருப்பகுதி திரைகதை அந்த பதுங்கு குழில அந்த மூனு விரர்களுக்கிடையே தான்
நடக்கிறது. அந்த பதுங்கு குழியில பிடிபட்டு இருக்கிற தனிமனிதர்கள் முலமா அந்த மக்களிடையே ஆன கண்முடித்தனமான வெறுப்புகள காட்டி
இருக்கிறது. UNனை கிண்டல் அடிச்சியிருகிறது எப்படி அரசியலும் ஈகோவும நல்ல நோக்கத்துக்கான அந்த அமைப்பை பாழ்பண்ணுகிறதுன்னு
சொல்லியிருக்கிறது.

இந்த படத்தில ஹிரொ கிடையாது மாறாக விக்டிம்ஸ் தான். இந்த படம்தான லகானோட(lagaan) போட்டிபோட்டு அந்த வருடத்திற்கான பிறநாடுகளுக்கான சிறந்த படத்திற்கான விருது பெற்றது.

Thursday, April 27, 2006

சினிமா சினிமா

வயதிலிருந்து ஈர்ப்பான விடயம் சினிமா.

புத்தகங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து அதிலே நானும் உலவி வந்து கற்பனையில் இருந்தபோது,நிஜத்துக்கு மிக அருகாமையில், கண்களால் பார்த்து, காதால் கேட்டு உறவாடி படபடக்க, மகிழ சலனப்பிம்பங்களை உருவகிக்கும் சினிமா என்னுள் ஏற்படித்திய ஈர்ப்பூம்,ஆச்சரியமும் ஆலாதியானது.

இன்னவரைக்கும் அந்த ஈர்ப்பு குறைவேயில்ல, சிலமணி நேரமே திரையில்
வாழ்கிற அந்த நிழ்களின் பாதிப்பு சில நாட்களாவது இருக்கும் சிலது இன்னும் இருக்கு. அரங்கிலிருந்த திரையில் பார்தத சினிமாக்கள் போல சினிமாவில் உள்ளே இருந்து பார்ததும் உண்டு.

முதலில் சினிமாவின் ஈர்ப்புக்காக பார்தத சினிமாக்கள் நாளடைவில் அதன்
கதையும் கதாபாதிரங்களும் அனர்தமாய் தோன்றின.விரைவில் நல்ல
சினிமாக்களை தேடி பார்க்க ஆரம்பித்தேன்.

அப்படி நான் பார்தத சினிமாக்களை என் பார்வையில இங்க எழுதலாமுன்னு இருக்கேன்.

முடிக்கிறதுக்கு முன்னே..

சில வருடங்களுக்கு முன்னே உலகச் சினிமாக்களை ஆராய்ந்து போது
அனைத்து சினிமாவிலும் பொதுவான ஒரு விடயம் கண்டுபிடிச்சாங்க அது
என்ன அப்படின்னா "நல்லது ஜெய்க்கனும் கெட்டது தோக்கனும்"
அப்படிங்கிறதுதான். சரிதானுங்களே.

Wednesday, April 26, 2006

மனித தலையளவு பருப்பு உண்ணும் மனிதர்களும்

சில மாதங்களுக்கு முன் தின்ணையில் நரேந்திரன் எழுதிய மார்க்கோ போலோ கட்டுரை படிச்சதிலிருந்து வலையில் தேடி இப்பதான் கிடைத்தது "மார்க்கோ போலோ பயணங்கள்" pdf.

நிறைய சுவாரசியமான, ஆச்சரியமான தகவல்களோடு நல்லாவே இருந்தது. மேல தலைப்புல இருக்கற விடயம் கூட மார்க்கோ போலோவின் தென் இந்தியா பற்றியான பயணக்குறிப்புகள்தான்.

மனித தலையளவு பருப்பு - தேங்காய்.
கருங் எரிக் கற்கள் - நிலக்கரி.

ஏனோ அவருடைய தென் இந்தியா பற்றியான பயணக்குறிப்புகள் எல்லாம் மலபார் அல்லது மாபார் ராஜியம்ன்னு குறிப்பிடுரதும் அதுனோட ராஜா சுந்தர் பாண்டித் தேவர்ன்னு சொல்லியிருக்கிறதும் குழ்ப்பமா இருக்கு. பாண்டியர்கள் ஆண்ட பகுதியாக இருக்குமோ ? தெரியல.

"மாபார்" ங்க்ற பெயர்க்கூட அரபியர்கள் அழைத்ததாக சொல்ரார். அரபியரகளை அந்த ராஜியத்தில யவனர்கள் என்று அழைத்ததாக குறிப்பெடுத்துறுக்கிறார். அரபியில் "மாபார்" ன்னா passage or ferry ன்னு அர்த்தமாம்.

அந்த ராஜயத்தின் முத்துகள் பற்றியும் முத்து குளிக்கிறதப் பற்றியும் ரொம்ப அழகா ஆச்சிரியத்தோட குறிப்பிடுகிறார்.சிலோன்(seilan அப்படி அவரு குறிப்பிடறது சிலோனதான்) என்கிற தீவுக்கும் மாபார் ராஜியத்தின் கடலுக்கும் இடையில எற்ப்படுற வளைகுடா பகுதியில அவுங்கு முத்து குளிக்கிறதா சொல்றார், ஏன்னா அந்த இடத்தில பத்து பன்னிரண்டு fathoms மேல கடல் ஆழம் இருக்காது சில இடத்தில் வெறும் இரண்டே fathoms ஆழ்ம்தான் இருக்குமாம்.

april மாதமும், may மாததில பாதி நாட்களும் தாம் அவுங்க முத்துக்குளிக்கிற நேரமாம். சரியா அந்தநேரத்தில தங்களோட பெரிய கப்பல்ல கிளம்பி BETTELAR( எந்த இடத்த சொல்றாரோ??) இடத்தில நங்கூரம் போட்டு அங்கிருந்து அருவது மயில் வளைகுடால உள்ளே சிறுப்படகுல போவாங்களாம்.

முத்துக்குளிக்கிறவங்க எல்லாம் கூலிங்கதானாம். இந்த நாப்பது சொச்ச நாளிக்கும் கூலிக் குடுத்து இவஙகள அழச்சிட்டுப்போறது வியாபரிகள் தான். இதுல கிடைக்கிற முத்துல பத்துல ஒரு பங்கு ராஜாவுக்கு.
சிறுசிறு படகுலப்போய் இந்த கூலிகள நாலிருந்து பன்னிரண்டி fathoms ஆழம் கடல்ல முழ்கி கிடைக்கிற முத்துகள இடுப்புல இருக்கிற சுருக்கு பைல போட்டு, தம் பிடிக்க முடியலனா மேல வந்து முச்சிவிட்டு திருப்பவும் முச்ச அடச்சி ஒரு ஜம்.

நிறக. இது சுவாரசியமா இருந்த சொல்லுங்க தொடரலாம் :-)

முடிக்கிறதுக்கு முன்னே..
நரேந்திரன் கட்டுரையின் கடைசி பத்தி..

மார்கோ போலோ எழுதியவற்றை அனைவரும் நம்பி விடவில்லை. வெனிஸ் நகரத் தெருக்களிலே அவர் நடந்து செல்கையில், சிறுவர்கள் அவரைப் பின் தொடர்ந்து, 'மார்கோ போலோ இன்னொரு பொய் சொல்லு! ' என்று கேலி செய்வார்களாம். மார்கோ போலோ சொன்னவை அனைத்தையும் பனிரெண்டாம் நூற்றாண்டைச் சாதாரண வெனிஸ் நகரத்து மனிதர்களால் புரிந்து கெ ாள்ள இயலவில்லை. அவரின் மரணத்திற்குப் பின்னால் (ஜனவரி 8, 1324) வெனிஸ் நகரக் கோமாளிகள் மார்க்கோ போலோவைப் போல உடையணிந்து, நம்பவியலாத பல கதைகளைச் சொல்லித் திரிந்தார்களாம்.

மரணப்படுக்கையில் இருந்த மார்க்கோ போலோவை அணுகி, 'இப்பொழுதாவது நீங்கள் சொன்னவை அனைத்தும் பொய் என்று உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்; அப்பொழுதான் உங்களின் ஆத்மா சாந்தியடையும் ' என வேண்டிய அவரின் நண்பர்களுக்கு அவர் சொன்ன, 'I have not told half of what I saw ' என்ற பதில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.

Wednesday, April 19, 2006

ஓட்டு போடுவதற்கு முன்

உங்கள் தொகுதில் உள்ள வேட்பாளர்களை பற்றிய விவரங்களை முடிந்த அளவுக்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

பழய ரவுடி, அடியாள் போன்ற வேட்பாளரை தவிருங்கள். வேறு வழியே இல்லையா, 49ஒ பிரிவை பயன்படுத்துங்கள்.

ஏற்கனவே அரசியலில் பொது வாழ்வில் உள்ளவரா, அவரோட செயல்பாடுகளை நினைவில் கொள்ளுங்கள்.

கட்சி அபிமானத்தைவிட உங்க தொகுதி வேட்பாளருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

எளிதில் அனுககூடிய வேட்பாளரா என்றுப் பாருங்கள்

நல்ல பேச்சாளரை விட செயல்ப்படுவரை தெரிவு செய்யுங்கள்.

நடிகர் நடிகை என வெறும் கவர்ச்சிக்கு மட்டும் அதரிக்காதிர்கள்.

ஒட்டு போடுவதற்காக கொடுக்கும் குடம், பணம் என்று எதுவானாலும் வாங்கி கொள்ளுங்கள், ஆனால் ஒட்டு அதன் பொருட்டு போடாதிர்கள்

எதிர்த்து ஓட்டு போடுவதற்கு பதில் ஆதரித்து ஓட்டு போடுங்கள்.

கண்டடிப்பாய் ஓட்டு போடுங்கள்.

சோறு

இருக்கும் சில்லரையல்லாம் கொடுத்து
வறுத்த சோறு வாங்கி திரும்புகையில் அவன்

சில்லரைக் கேட்டு கையெந்தியவனிடம்
இயலாமையாய் சோற்றைப்பகர வினவியபோது
மறுதலித்தான் பசியோடு
தனக்கு சோறுப் பிடிக்காது என்று

வருடங்களுக்கு முன் நடந்தவைதான், இன்றும்
நினைவாடுகிறான் என்னோடு.

ஒரு மதியம் புழுக்கத்தால்
வெளியே அமர்ந்து சோறு உண்ணுப்போது
வருகிறான் அவன் தன் வழி தொலைத்து
யாரையும் அறிந்திருக்காமல்.

தன்மானம் விழுங்கி, என் கண்களை தவிர்த்து
ஈனக்குரலில் பகருகிறான் தன் கழிவிரக்கத்தை என்னோடு
தன் வயிறு கடைவதையும், பாதம் எரிவதையும்
பசியாரத அவனின் பல இரவுககளையும்.

என் சோற்றில் பங்குதர முன்வந்தபோது நன்றியுரைத்து
மறுதலித்தான் தனக்கு சோறுப் பிடிக்காது என்று.

சோகமாக நின்ற அவனைய பார்த்து புன்னகைத்தேன்
என் உண்மையான அவனுக்கான் அக்கரைய உணர்த்த
இருவருக்கும் போதுமானளவு இருக்கிறது என்றும்
வேண்டாம் என்றான்
தனக்கு சோறுப் பிடிக்காது என்று.

அதன்பின் அவனை அங்கும் இங்கும் பார்க்குமோதல்லாம்
அவன் சில்லரை யாசித்தான்
அவனுக்காக சிறு பிரத்தனைகள் செய்தேன்
அவன் பசிகளற்ற இரவுகளுக்காகவும்
என் அவனுக்கான் அக்கரை அவன் உணரவும்

தெருக்களிலே உறங்குவதால் அவனக்கு
வருடங்களைவிட வயது கூடியது
அவன் வயிறு படாய்படுத்தினாலும் அவன் சோறு
உண்ணத் தாயாரில்லை.

எது அவனின் மறுதலித்த காரணி
சிறு வயதில் எப்பொதும் உண்ட சோறா?
பசிக் கொடுமையை விட அவனின் மகிழ்சியற்ற வாழ்வின் சோகமா?
அல்லது இதுபோலவா!

வாழ்வில் எல்லாம் இழந்தாலும்
தான் என்ன உண்ணவேண்டும் என்பதை தெரிவு செய்யும்
உரிமையும் சுதந்திரமுமா?
அதன் பொருட்டே
தனக்கு ஒவ்வாவது சோறு என்றதும்.

Tuesday, April 18, 2006

மாநில சுயாட்சி, திமுக, என் சந்தேகங்கள்

திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட மாநில சுயாட்சி சாத்தியமா?

ஜிவ நதிகள் இல்லாத தமிழகத்தில், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பக்கிட்டின் நிலை என்ன?

மொழி, இனம் என பல வகையில் உணர்ச்சிவயபடும்மக்களுக்கிடையே மாநிலங்களின் உறவுகள்?

ஊழல் மலிந்த நிர்வாக இயந்திரங்களிடம் அதிக அதிகாரம்?

Monday, April 17, 2006

சிறு நரிகளுக்கு நாட்டாமை?

சூது,வஞ்சகத்தின்
இருப்பிடமாக தெரிகின்றன
மனிதர்களின் கணகளுக்குக்
சிறு நரிகள்.

எதிரி, நன்பன்
வஞ்சகங்களின் உரையாடல்களில்
எப்படியாவது நுழைந்துவிடுகிறது
சிறு நரிகள்.

சாயம் வெளுத்துப்போச்சு டும் டும்
என சாயம் புசியவர்களின்
கேலிப் பொருளாய்
சிறு நரிகள்.

காடுகளில் பெருச் சிங்க, புலி
கூட்டங்களின் ஊடே இரைத் தேடும்
சிறு நரிகளுக்கு ஏதிராய
எராளமாய் பழமொழிகள்.

நரிக்கு நாட்டாம வந்தா?
என்று கூடக் கேட்கிறார்கள்.
தேவைதானா சிறு நரிகளுக்கு
நாட்டாமை?

Friday, April 07, 2006

கலர் டிவி

பகுத்தறிவு கடையில்
இலவசமாய் கலர் டிவி
கொள்கைகள் மற்றுமே விற்றக்கடையில்
கலர் டிவி அதுவும் இலவசமாய்
எங்கும் கேள்விக் குரல்கள்

திரையும், திரைநடிகர்களுயும்
பகுத்தறிவு கடைப் பரப்பியதுப் போல்
இது காலத்தின் கட்டாயம்
உரத்த எடுத்துரைத்தார்
பகுத்தறிவு கடைத் தலைவர்

பழுத்த, நுகர்வோரின் நாடியறிந்த
தலைவரின் சொற்படி இனிதே முடிந்தது
இலவச கலர் டிவித் திருவிழா
விவரமயறிந்துவர அனுப்பினார் தலைவர்
வந்ததது இப்படி

கலர் டிவிதான், ஆனா
கறுப்பும் சிவப்பும் தான் மிகையாய்
எப்போதாவது மஞ்சள் கலரும் உண்டு
ஆனால் என்றும் பச்சை வருவதில்லை

டிவியில் வரும் நிகழ்ச்சிகளின் தரம்?
அதில் பகுத்தறிவின் தாக்கம்?
எழுந்தது சில கேள்விகள்
தலைவருக்கு தெரியும் கலர்தான் மக்களுக்கு
முக்கியம் நிகழ்ச்சிகளை விட

கலர் டிவி

பகுத்தறிவு கடையில்
இலவசமாய் கலர் டிவி
கொள்கைகள் மற்றுமே விற்றக்கடையில்
கலர் டிவி அதுவும் இலவசமாய்
எங்கும் கேள்விக் குரல்கள்

திரையும், திரைநடிகர்களுயும்
பகுத்தறிவு கடைப் பரப்பியதுப் போல்
இது காலத்தின் கட்டாயம்
உரத்த எடுத்துரைத்தார்
பகுத்தறிவு கடைத் தலைவர்

பழுத்த, நுகர்வோரின் நாடியறிந்த
தலைவரின் சொற்படி இனிதே முடிந்தது
இலவச கலர் டிவித் திருவிழா
விவரமயறிந்துவர அனுப்பினார் தலைவர்
வந்ததது இப்படி

கலர் டிவிதான், ஆனா
கறுப்பும் சிவப்பும் தான் மிகையாய்
எப்போதாவது மஞ்சள் கலரும் உண்டு
ஆனால் என்றும் பச்சை வருவதில்லை.

டிவியில் வரும் நிகழ்ச்சிகளின் தரம்
அதில் பகுத்தறிவின் தாக்கம்
எழுந்தது சில கேள்விகள்
தலைவருக்கு தெரியும் கலர்தான் மக்களுக்கு
முக்கியம் நிகழ்ச்சிகளை விட

Friday, March 31, 2006

பூசைக்கு வந்த பூ

பூசைக்கு வந்த பூ தான்
கொஞ்சம பிச்சிப் போடாமல்
அப்படியே போட்டுவிட்டுப் போங்கள்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

யானைமுகத்தினனை வேண்டிக்கொள்ளுங்கள்
உங்கள் வேண்டுதல் நிறைவேறட்டும்
ஆனால் அடுத்தமுறை தேங்காய சிதறடிப்பதாய்
வேண்டிக்கொள்ளாதிர்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

ஐய்யனாருக்கு படையல் போட்டு பிள்ளை வரம்
வேண்டிக்கொள்ளுங்கள்
முத்துக்களாய் பிறக்கட்டும் பிள்ளைகள் பண்ணிரண்டு
ஆனால் ஆட்டுக்கடவை விட்டுவிடுங்கள்
உங்களுக்கு புண்ணியம கிட்டும்.

Wednesday, March 29, 2006

விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம்.

திமுக கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் இடம்பெற்றுள்ளதை பெரிதும் வரவேற்கின்றேன்.

இது மிகவும் அவசியமானதும் அவசரமானதும்க்கூட

அதே சமயதில் காப்பீட்டு கழகங்கள் (பொது மற்றும் தனியார்) இதனை லாப நோக்கில் பெரு விவசாயிகளுக்கு மட்டும் எடுத்து செல்வதை தவிர்த்து சிறு விவசாயிகளும் பயன்பெறுமாறு செய்யவேண்டும்.

சிறுவிவசாயிகளுக்கு இதுப்பற்றியான பயன்ப்பாடு பொது ஊடகளின் முலம் அறியத்தர வேண்டும்.

இது வெறும் தேர்தல் அறிக்கையோடு நின்றுவிடக் கூடாது.

நம்பிக்கையோடு.

Monday, March 27, 2006

கிராமங்கள் மாறிவிட்டதாம், யார் சொன்னது

இன்றும் காது நீண்ட கிழவிகள்
பாக்கு இடித்துக்கொண்டு திண்ணையில் தானே குந்தியிருக்கிறார்கள்.

ஒண்ணுக்கு அங்கேயிம்,
ரெண்டுக்கு கொல்லைக்கும் தானே.

எட்டரை மணி வண்டி எனப் பெயர்கொண்ட பேருந்து
சரியாய் ஒன்பதரைக்குத்தானே வருகிறது.

பெரியவர் மகன் சின்னவர் தானே
பஞ்சாயத்துத் தலைவர்.

மாறிவிட்டதாம், யார் சொன்னது
கிழவீதியில் பூக்கும் நந்தியாவட்டை
இன்னும் சிவன் கோவில் வருவதில்லை.

மேலவீதியில் மட்டுமே மாடி வீடுகள்
அங்கு அப்பன், பூட்டன் காலத்திலிருந்து
'அவர்கள்'த்தான் மாட்டுக்காரன்.

எல்லாம் அப்படியேத்தான்.
மாறிவிட்டதாம்யார் சொன்னது.

போன வருசம் பக்கத்து டவுனுக்கு சித்தாள்
வேலைக்குப் போன சவந்தியக்கா

அப்புறம்,ரண்டு வருசம் முன்னாடி வந்த
லிட்டில் பிளவர் பள்ளிக்கூடமும் அந்த
சாமியாரையிம் தவிர

எல்லாம் அப்படியேத்தான்.
மாறிவிட்டதாம் யார் சொன்னது.

Thursday, March 23, 2006

மிண்டும் பசுமை புரட்சி

படிப்பினைகள்

கோடிக்கனக்கான மக்களின் பட்டினியை ஒழிக்க தலைவர்களின் சொற்தொடர் தான் இந்த "பசுமை புரட்சி - 2". ரசயானங்களின் மாயங்களாளும்,தாவிர-ஜீன்களின் ஜாதகங்களை மாற்றி அமைக்கும் புதிய இயலினாலும் உணவு உற்பத்தியை பெறிக்கி பட்டினிச் சாவுகளற்ற தேசம் செய்வோம்.

உலகை இந்த பட்டினிச் சாவில் இருந்து உய்விக்க இவர்கள் வகுக்கும் வழிகளில் ஒன்று, பூச்சிக் கொள்ளி ரசயானங்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவங்கள் இந்த புதிய தாவிர-ஜீன் இயல் நிபுனர்களாக உருமாரி உய்விக்கும் விவசாய பொருள்களுக்கு தாரளச் சந்தை ஏற்படித்தித் தருவதுதான்.

ஆனால்,முதல் பசுமை புரட்சியின் முழக்கமான, "பசுமை புரட்சியின் இந்த மநதிர விதைகள் தான் பட்டினிச் சாவுகளை பூட்டும்ச் சாவி" என்னவாயிற்று. இன்றும் பட்டினிச் சாவுகள் நிறைந்த உலகம்ந்தான் இது.

60வதுகளின் முடிவில், முன்றாம் நிலை உலக நாடுகள் பட்டினிச் சாவுக்கொடுமைகளை தடுக்க, பிரச்சனையின் வேர்களை அராய்ந்துக் களைய சாவுக்கொடுமைகளின் திவிரம் இடங்கொடுக்காமையால். அவசர அவசரமாய் அப்போதைக்கு செய்க்கூடிய உணவு உற்பத்திய மிகஅதிகப்படுத்த இந்த மந்திர விதைகளை விட்டால் வேறுவழில்லை. இந்த விதைகளும் அதற்கான விவசாய முறைகளும் மிகப்பெரிய மாற்றங்களை உணவு உற்பத்தியில் ஏற்படித்துயதான். ஆனா அதன் பின்விளைவாக நாம இழந்தது விவசாயத்தின் அதார வளமான நிலத்தையம் நிலத்தடி நீரும். கொஞசம் அதிகமான விலைதான்.

சரி இந்த பசுமை புரட்சி உலக பட்டினிச் சாவுகளை நிறுத்திச்சான்னுக் கேட்டா, இல்லை. வருத்தமான உண்மை. மிகப் பெரிய அளவில உணவு உற்பத்தி அதிகமாச்சித்தான். உணவுப் பொருட்கள் அதிகமான பட்டினி குறையனும்தானே ஆனா இல்லை. ஏன் மாற்றம் வரவில்லை, அடிப்படையான காரணம் தாங்க, வறுமைக் கோட்டுக்கு கிழ இருக்கிற மக்களிடம் வாங்கும் சக்தி சரிசமமா இல்லைங்க அதான். எவ்வளவதான உணவு உற்பத்திய பெருக்கினாலும். அதை வாங்க அந்த மக்களின் தரம் உயர்த்தபடாவிடில், இந்த பட்டினிச் சாவுகள் தொடரும் :(

Tuesday, March 21, 2006

அட நம்ம பரட்டை

நம்ம பரட்டை மறுபடியும் இப்போ மக்கள் மத்தியிலே விவாதப் பொருளாகிவிட்டார்.

அந்த பரட்டைப் பற்றிய கதைதாங்க(கற்பனையான) இது.

இந்த கதை ஆரம்பிக்கும்போது பரட்டை அவ்வளவு பரபரப்பான ஆளு இல்லை.அவ்வளவா படிப்பும் இல்லை, வருத்தமும் இல்லை. ஒரு வேலை இருந்தது, சாப்பாடு, விரும்பிய அளவு புகை, தூக்கம், வேலை அவ்வளவுதான். குறிப்பிட்டு சொல்லனும்னா கொஞ்சம் சுறுசுறுப்பான ஆளு.

சில நாளா தலைக்கு எண்ணை வைக்க மறந்ததுதிலிருந்து இப்படி ஆனது அவன் தலை பரட்டையா. வார முடியாத அளவுக்குப்போனப் பிறகு கையால கோதவேண்டியதா இருந்தது.ஏன் இப்படின்னு கேட்டா, நாலு பேரு ரசிக்கிறாங்கன்னு பதில். நிசந்தான், நாலு எட்டாச்சு, எட்டு பத்தாச்சு.கூட்டாளிங்க சொல்ற மாதிரி லேசா சினிமா ஆசை வந்தது.

சினிமாவுக்கும் வந்தாச்சு, முதல்ல அந்த பரட்டை தலைக்கு இருந்து ஈர்ப்பை மறந்து கொஞ்சம் எண்ணைய தலைக்கு காட்டுனவுடனே வெளுத்துப்போனது. சரின்னு இனிமே பரட்டையோட மட்டும்தான் ஆனப் பிறகு பரட்டையே பிரபலமடையந்தது.

மக்கள் பரட்டை சினிமாவுக்கு லஞ்சம் கொடுத்து பார்கக வந்தனர். பரட்டையோட வருமானம் அதிகரித்தது, கோடீஸ்வரன் ஆனா(ர்).
பரட்டை படத்தை பார்ககத்தான் எவ்வளவு ரசிகர்கள். படங்கள் திருவிழா நேரங்கள்ள வெளியிடுவது போயி பரட்டை படம் வெளியிடும்

நேரம்மேல்லாம் திருவிழாவானது. கவிஞர்கள் அவருக்காக பாடல் எழுதினர். பிரபலமான பத்திரிக்கைகள் பரட்டை வாழ்கை வரலாற்றை எழுதி பணமும் புகழும் சம்பாதித்தனர்.

அனைத்து முக்கியமான் நிகழ்வுகள் குறித்து பரட்டையின் கருத்துகள் கேட்டு பத்திரிக்கைகள் பிரசுரித்தன.

பரட்டை அதைப்பற்றி இப்படி சொன்னார்.., இதைப்பற்றி அப்படி சொன்னார்... இப்படியாக எதைப்பற்றியும் எல்லாவற்றைப் பற்றியும் பரட்டை எதாவது சொல்லியாக வேண்டியிருந்தது.

இப்போ பரட்டைய தங்கள் பககம் வலைக்க எல்லோரும் யோசிச்சாங்க. எல்லோருக்கும் முதலில் எதிர்கட்சித் தலைவர் பரட்டைக்கு பட்டம் கொடுத்து விழா எடுத்தார்.விழாவில தலைவர் செல்லமாக பரட்டை தலைய கோத அது மறுநாள் தலைப்பு செய்தியானது. பத்திரிக்கைகள் விற்பனை அதிகரித்தது, பிறகு எல்லா கட்சிகளும் பரட்டையயை தங்கள தளபதி என்றது.

குழ்ப்பமான பரட்டை தன் நெருக்கமான சானக்கிய பத்திரிக்கையாளரைய கலந்தாலோசித்தார்.அந்த சானக்கியர் பரட்டையயை அரசியல் ஞானம் உள்ளவராக, திர்கதரிசியாக பலக்கட்டுரைகள் வரைய்ந்தார்.

ஞானம்,திர்கதரிசி, அரசியல் ரொம்ப குழம்பிப்போனார் பரட்டை.இதற்கு இடையில் நதிநீர் பிரச்னைப்பற்றி பத்திரிக்கைகள் பரட்டையிடம் கருத்து கேட்டன. கருத்துககு எதிர்வினை எற்பட்டது. பரட்டையின் வேர் அறாயப்பட்டது. எதிர் குழுமம் பலப்பட்டது. பரட்டை கலங்கி ஸ்டன்ட்டு கலைஞகர்களிடம் அலோசித்து அடையாள உண்ணாவிரதம் இருந்தார். எல்லா பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி தலைப்புச் செய்தியாக முதல்ப்க்கத்தில் வெளியானது. மத்திய அரசு பரட்டைக்கு உயரிய விருது கொடுத்த்து. இப்போது என்ன செய்வது மக்கள் மனதில் ரொம்ப குழப்பம் ஏற்பட்டது.

கொஞச நாள் பரட்டைப் பற்றி எந்த செய்தியும் இல்லை, பரட்டையின் இருப்பை மக்கள் மறந்துப்போயின.

Sunday, March 19, 2006

முகமுடிகளற்று

ஒரு நாள் அணியத்தர முகமுடிகளற்று
நம்பிக்கைகள் உடைபட்டு
அவளுக்கான அவளுடைய இடத்தை அறியும் போது
அவள் தன்னை வெளிப்படுத்தகூடும்
தன் முகத்தை முகமுடிகளற்று.

Tuesday, March 14, 2006

கனிஷ்சா சதுரமும், கடவுளரும்


மனிதனுடைய அடிப்படை கட்டமைப்பே மாதிரிகை(patterns) அடையாளப்படித்திக்கிறதும், அதை தேடுவதும் தான். நம்முடைய மூளை நரம்புகளில் பின்னப்பட்டு செய்தியாய் இருப்பதும் இந்த மாதிரிகை(கள்) தான். இந்த மாதிரிகை(கள்) முற்றிலும் சரியானவையாக இருக்க அவசியமில்லை, ஆனா ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவையாக இருக்கும்.

இது ஏன்னா நாம எப்பவும் உலகத்தை ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவையாக பார்க்க விரும்புறோம், அது ஒழுங்கற்றதாக கூட இருக்கலாம்.ஆனா அதற்கு முறனா இயற்கை நம்மை இப்படி பரிணாமபடுத்தியிருக்கலாம், எதிலும் ஒரு ஒழுங்கை பாரு அதை இல்க்கமிட்டு அடையாளப்படுத்து, சேமி. இப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடையாளப்படுத்தபட்ட அடையாளங்களாக இந்த கடவுளர்களும் இருக்கலாம்.

Bart Kosko அவருடைய Fuzzy Thinking புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கனிஷ்சா சதுரதுல( Kanizsa ) தெரியுர மாயச் சதுரம் போல கடவுளும் இருக்கலாம். அவரின் கூற்றுப்படி, கடவுள் , ஒரு பொய்யான அண்டத்தில் உள்ள புழுதி மண்டலத்தின் பொய்யான கோளில் ஜிவிக்கும் ஒரு உயிரின் மூளையின் நரம்புகளால் பின்னப்பட்ட ஒரு புல்லறிவு (false knowledge).



நம்முடைய மூளையின் இந்த மாதுரிகை ஏற்படுத்தும் புல்லறிவுக்கு உதாரணம் கனிஷ்சா சதுரம். நேர்கோணங்களில் வெட்டபட்ட நான்கு வட்டங்கள் ஏற்படுத்தும் பொய்யான எல்லைக்கோடுகளும் அதன் நேர்மறையான் உட்புற வண்ணமும் அங்கு இல்லாத சதுரத்தை நம்மூளை மட்டும் அடையாளம் காண்கிறது.

நம் அடிப்படை கட்டமைப்பின்படி அங்கு இல்லாத சதுரத்தை இல்லை அப்படின்னு சொல்றது கடினம்.கடவுள் விடயத்தில் கூட இந்த புல்லறிவு உண்மையாக இருக்கலாம்.இந்த அண்டம் எற்படுத்தும் பொய்யான எல்லைகளும், அதன் பிரகாசமான உள்வெளியும் உருவகிக்கும் கடவுளரின் பிம்பத்தை நம்மில் பலரால் பார்க்காமல் இருக்கமுடியாது.

Reference :

Why People Believe in God An Empirical Study on a Deep Question
by Michael Shermer
Nov, 1999

Monday, February 27, 2006

ஃ - அய்தஎழுத்து

ஏன்? இந்த அய்தஎழுத்து நாம அவ்வளவாக பாவிக்கிறது இல்ல? என் நினைவிக்கு வருவது அஃது, இஃது, எஃகு தான். அதுவும் இப்போ யாரும் பாவிக்கிறது இல்ல.

அப்புறம் இந்த F,G,H,X,Z தமிழ்ல வரிவடிவம் இல்லாததாலFather க்கு ஃபாதர் அவ்வளவுதான்.

இது ஏன்? ஏன்? யாராவது சொல்லுங்க அப்பூ :(

Tuesday, February 21, 2006

Planes, Trains, Automobiles மற்றும் அன்பே சிவம்.

'பிளேன்ஸ் டிரைன்ஸ் அண்டு ஆட்டோ மொபைல்ஸ்' என்ற ஆங்கில படம். 1987ல் வெளிவந்தத பழைய படம். நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் மார்டிண் மற்றும் ஜான் காண்டி நடித்தது.

தொழில்நிமித்தமாக நியூயார்க் செல்கிற, ஒரு சிடுமூஞ்சி பிசினஸ் எக்ஸிக்யூடிவ். தன் குடும்பத்துடன் 'Thanks Giving' கொண்டாட திரும்ப சிக்காகோ செல்கிறார். ஆனால் ஒழுங்காக போய் சேர்ந்தாரா ? என்பதுதான் கதை.

நியூயார்க்கில் டாக்ஸி பிடிக்கிறதுல ஆரம்பிக்கிறது சோதனை. பிடிச்ச டாக்ஸியில் வேரொத்தர் ஏற கடுப்பாகி ஒரு வழியாக விமான நிலயத்துக்குப் போன அங்க விமானம் தாமதமாகிறது. பொததற்கு அங்க கூடவே ஒரு லொடலொட அதிகபிரசங்கி. அளவுக்கதிகமான அன்போட பழகுற சக ப்ரயாணியாக ஜான் காண்டி. அவரோட அன்பு தொல்ல தாங்காம கழட்டிவிட ஸ்டீவ் செய்யற ஒவ்வொரு முயற்ச்சியும் தோல்விதான்.

படம் நெடுக இவ்விருவரின் முறன் நல்ல நகைச்சுவை. முடிவில் நம்ம 'சிடுசிடு' ஸ்டீவ் ஜானின் அன்பை புரிஞ்சிக்குறார். அப்புறம் என்ன 'Thanks Giving' க்கு ஒழுங்கா வூடு போய்ச்சேருகிறார்.

Sunday, January 22, 2006

The Alchemist
Paulo Coelho

படித்தது

கனவுகள், பட்ச்சியின் குறியிடுகள், சகுனங்கள், சாகசங்கள் என ஒரு பரந்த அறிவும், ஆளுமையும் உள்ள முனியின் எதிரொலியாக வாசகனை புகைப்போல சுழ்ந்து கொள்கிறது, "The Alchemist" புதினம்.

கனவும், கனவுகளை விடாது துறத்தும் சந்த்யகோ ங்கற பையன் முலமா நம்மோட உண்மையான மகழ்ச்சியும், முழுமையும், படைப்பின் நோக்கமாக நமக்கு விதிக்கப்பட்டவைகளை கனவுகளின் ஊடாகவும், நிகழ்வுகளாகவும், சகுனங்களாகவும் இயற்கை அடையாளம் காட்டுங்கறத இந்த நாவல் நெடுக சம்பவங்களா அடிக்கி இருக்குறார் நாவலாசிரியர்.

சந்த்யகோவின் எகிப்து பிரமிட் புதையல் கனவும், அந்த தேடல் பயண நிகழ்வுகளின் முலம், நம் வாழ்வின் கனவுகளும், அதை அடைய படும் இடர்கள், பட்டறிதல், பயணம், உலகம் பற்றியான புரிதல்,சுயத்தேடல் என வாழ்வியல் தத்துவங்கள் எளிமையான நடையில் கதை நெடுக.

சான்டியகோ, அவனோட புதையல் தேடல்லில் உலகத்தின் சிறப்பையும், அற்புதமான மனிதர்களையும், *அல்கெமிஷ்ட்* 'யும் சந்திக்கிறான். முடிவில் புதையல அவனக்கு பிடித்த அந்த பழைய சர்ச் 'லே கண்டு எடுக்கிறான்(treasure lies where your heart belongs).

Thursday, January 19, 2006

புதிதாக பறவைக்கூடு

நேற்று, வெட்டுவதற்காக குறியிட்ட பழய மரத்தில்
இன்று, புதிதாக பறவைக்கூடு

Wednesday, January 11, 2006

சாலையோரத்தில் காலணிகளை விட்டுவந்தேன

பெயர்களை மறந்தேன்
காற்சட்டை பைகளை காலிசெய்தேன்
சாலையோரத்தில் காலணிகளை விட்டுவந்தேன்
பின்னிரவில் கடிகாரத்தின் முட்கள் எதிர் திசை சுழற்சியில்
குடும்ப புகைப்படத்தில்
மீண்டும்
என்னை சிறுவனாக கண்டேடுத்தேன்

(மொழிபெயர்பு மட்டுமே நான்.)

Tuesday, January 10, 2006

அவர்களின் பாடல்கள் மட்டுமே சேறுகளற்று இருக்கின்றன

கடும் குளிரில் ஒரு பின்னிரவில்
தூங்குகிறது நிலா, குளத்தில்.

எறும்புகளை நசுக்கினேன்
குழந்தைகள் பார்த்துக்கொண்டு இருந்தன.

என் ஜன்னலில் படிந்த கைரேகையின் ஊடாக
மேகங்களற்ற நீலவானம்.

முகமற்று, இலக்கமிட்டு
தனி புள்ளியாய், அனானிமெஸ்.

அவர்களின் பாடல்கள் மட்டுமே
சேறுகளற்று இருக்கின்றன - உழவர்

(மொழிபெயர்பு மட்டுமே நான்.)

Thursday, January 05, 2006

சுற்றும் பூமி சுற்றும்
வருடம் 2005

எல்லா வருடம்போல சாதாரண, சொல்லப்போனால் சற்றே மகிழ்ச்சியான வருடமாகிருக்ககூடும், அந்த கொலை அலைகள் வாராது போயிருந்தால். அதிலிருந்து மும்பையில் வெள்ளம், கஷ்மிரில் நிலநடுக்கம், டில்லியில் குண்டிவெடிப்பு,தமிழகத்தில் பேய் மழை அப்பப்பா மிக கொடுரமான வருடமாகிப்போனது.அமைதியான வருடம் திடிரன, நிறைய உயிர் சேதங்கள், நூற்றுக்கு மேலான கிராமங்களின் அழிவு, நகரங்கள் ஷம்பித்து போயின.

இந்த பேரழிவுகள் மனிதர்களின் வாழ்வை ஊனபடுத்தினாலும், சாமானயர்களின் நாயக செயல்களை இனங்கான முடிகிறது.

இவர்கள் திரையில் தோன்றும் சினிமா நாயகர்கள் அல்ல நம்மைபோல சாதாரணர்கள். நம்மிடையே பலரால் செய்துருக்ககூடிய ஆனால் சிலரே செய்த செயல்கள்.

அந்த சாமானயர்களின் நாயக செயல்களுக்கு நெகிழ்வான நன்றி, வணக்கம், வந்தனம்.

Monday, January 02, 2006

Magical Realism??
இருட்டின் மேல் கருப்பாய்

பயம் எறும்புகள் போல் என் படுக்கையில் மெல்ல ஊர்ந்து என் கால்கள் வழியே ஏறி என்னை முழுவதுமாய் பூசிக்கொள்கின்றன.

இறுக்க முடிய நடுங்கும் இமைகளை மீறி. . ஜன்னல் வழியே நழுவி என் அறைக்குள் விழுகிறது.

எந்த சலனமும் இல்லாமல் அது நீள்கிறது. சற்றே தையிரியமுற்று இமை விலக்குகிறேன், அது என் படுக்கையின் தொட்டுவிடும் துரத்தில்.

என் இருப்பை அலட்சியம் செய்து படுக்கையின் காலில் தேங்குகிறது..

சலனமுற்று அஞ்ச முயற்சிக்கிறேன், அது படுக்கையின் காலில் இருந்து மெல்ல நழுவி, பின் வேகமுற்று படுக்கையின் மீது ஏறி என்மீது இருட்டின் கருப்பாய் பூசிக்கொள்கிறது.

என் திறந்த வாயின் வழியே பய எறும்புகள் வெளியேறுகின்றன.